மனித குலத்திற்கு பெருந்துயர்களை தந்துகொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்று காலத்தில், பல்வேறு மதங்களின் மனிதாபிமானக் குழுக்கள் ஒன்றிணைந்து, மக்களின் துயர் துடைக்க உதவி வருவதற்கு, சிங்கப்பூர் பேராயர், William Goh தன் நன்றியை வெளியிட்டுள்ளார்.
பெருந்தொற்று காலத்தின்போது, அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை, மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கத்துடன், ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய தேவையை அதிகம் அதிகமாக உணர்ந்து, அனைத்து மதங்களும் செயல்பட்டன என்று கூறிய பேராயர் Goh அவர்கள், நவம்பர் 4ம் தேதி சிறப்பிக்கப்பட்ட தீபாவளி திருவிழாவின்போது, இந்துக்கள், ஜெயின் மதத்தினர், சீக்கியர்கள் என அனைவரும் இணைந்து கொண்டாடியதையும் எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
இருளின் மீது ஒளி வெற்றிகண்டதை கொண்டாடும் தீபாவளித் திருவிழா, மக்களின் இதயங்களில் ஒளி ஏற்றவேண்டிய தேவையையும், செபம் எனும் எண்ணெய் இருக்கும் வரையில் ஒளி எனும் தீபம் எரிந்துகொண்டிருக்கும் என்பதையும் நமக்கு நினைவூட்டி நிற்கிறது என பேராயர் மேலும் கூறினார்.
அனைத்து மதங்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு, பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து, சமுதாயத்தில் உடன்பிறந்த உணர்வை ஊக்குவிக்கவும் பேராயர் Goh அழைப்பு விடுத்தார்.