Namvazhvu
குடந்தை ஞானி கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை
Thursday, 06 Jan 2022 07:20 am
Namvazhvu

Namvazhvu

தென்மேற்கு இந்தியாவின் கர்நாடகாவில் இந்துமத அடிப்படைவாதிகளின் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், வழிபாட்டுத்தலங்கள், அரங்குகள் மற்றும் வீடுகளில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை, காவல்துறை கட்டுப்படுத்தியுள்ளது என்று ரிலீஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கிறது.

உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பார்ட்னர்ஸ் ஆப் ரிலீஸ் இன்டர்நேஷ்னல் (Partners of Release International) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாட்டின் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வமைப்பின் உறுப்பினரான கிறிஸ்தவப் பேராயர் ஜோசப் டி சூசா அவர்கள் "இந்தியாவில் கர்நாடகாவின் நிலைமை பதட்டமாக உள்ளது என்றும், பெல்குவாமில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும் குழுவாகச் சந்திப்பதற்கும் காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என்றும் இச்சூழல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் வழிபாடுகளை நடத்த இயலாத நிலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் கவலை தெரிவித்தார். இத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் எல்லையை மீறுவதாகத் தெரிவித்த பேராயர் டி சூசா, "இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இந்துமத அடிப்படைவாதிகளின் வற்புறுத்துதலின் அடிப்படையில் மதமாற்றத்தை சட்டவிரோதமாக்குவதற்கான இயக்கம் வளர்ந்து வருகிறது என்றும்புதிய சட்டத்தை இயற்றும் புதிய மாநிலமாக கர்நாடகா மாறி வருகிறது என்றும், தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

மேலும், சில இந்து மதத் தலைவர்கள், கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், கட்டாய மதமாற்றம் என்ற எண்ணமே இந்தியக்  கிறிஸ்தவர்களுக்கு வெறுப்பாக உள்ளது என்றும், தேசத்தின் பல பகுதிகளில், மத அடிப்படைவாதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதால், கிறிஸ்தவர்கள் இப்போது பெரும் அச்சத்தில் உள்ளனர் என்று எடுத்துக்காட்டியதுடன் கிறிஸ்தவ சமூகம், அதன் வழிபாட்டுத்தலங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை இலக்காகக்கொண்ட இடைவிடாத வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இந்திய சனநாயகத்தில் இடமில்லை என்றும், எடுத்துக்காட்டிய பேராயர் இந்த இக்கட்டான நிலையில் பிரதமரிடமிருந்து கிறிஸ்தவர்கள் பாதுகாப்பை எதிர்பார்க்கிறோம் என்றும், நம்பிக்கை தெரிவித்தார்.