Namvazhvu
அமெரிக்க கண்டத்தின் நீதிபதிகளின் குழு நன்மைக்காக போராடுபவர்கள் ஒருபோதும் தனித்து இருக்க மாட்டார்கள்
Tuesday, 22 Nov 2022 07:16 am
Namvazhvu

Namvazhvu

தவறு செய்பவர்களின் அதிகாரத்தை துணிச்சலோடு எதிர்கொள்ளும் நீதிபதிகள் மக்களின் நம்பிக்கையையும், வலிமையையும், கேள்விகளையும் புதுப்பிக்கின்றார்கள் எனவும், நன்மைக்காக போராடுபவர்கள் ஒருபோதும் தனித்து இருக்க மாட்டார்கள் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

சமூக உரிமைகளுக்காகவும், பிரான்சிஸ்கன் கோட்பாடுகளுக்காகவும் அமைந்த அமெரிக்க கண்டத்தின் நீதிபதிகளின் குழுவிற்கு நவம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பூமிக்கோளம் சந்திக்கும் நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து, மனிதகுலத்தையும் உலகத்தையும் குறைவான மதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், இந்தக் கடினமான சூழலில் தீர்ப்பளிப்பவர்களின் பங்கு முக்கியமானதாக வரையறுக்கப்படுகின்றது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மனித கண்ணியம், அர்ப்பணிப்பு, வார்த்தைகள் மற்றும் நடைமுறைச் செயல்கள் வழியாக சமூகநீதி அன்றாடம் மீட்டெடுக்கப்பட வேண்டும் எனவும், ஒருசுயமான மற்றும் உண்மையான நீதியால் மக்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உங்களை ஒன்றுபடுத்த உதவும் இவ்வமைப்பு உங்களைப் பாதுகாக்கவும் உதவட்டும் எனவும், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த நீதிபதிகளாக விளங்குவதன் வழியாக மக்கள் விரும்பும் நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தகுதியான பயிற்சிகள் அவற்றைப் பெறுபவர்களையும், அவற்றைச் செயல்படுத்துபவர்களையும் தகுதியானவர்களாக ஆக்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும், தீர்வுகளின் நன்மதிப்பு அவற்றை ஊக்குவிப்பவர்களை ஆசீர்வதிப்பதோடு, மட்டுமல்லாமல், அநீதியாளர்களின் அதிகாரத்தை எதிர்கொள்ளும் நீதிபதிகளின் தைரியம், மக்களின் நம்பிக்கையையும் வலிமையையும் புதுப்பிக்கிறது என்றும், நன்மைக்காக போராடுபவர்கள் ஒருபோதும் தனித்து இருக்க மாட்டார்கள். என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.