Namvazhvu
சனவரி 18 - 25 கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக செபியுங்கள் : திருத்தந்தை
Thursday, 19 Jan 2023 11:26 am
Namvazhvu

Namvazhvu

ஜனவரி 18,  புதனன்று தொடங்கிய  இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக இறைவேண்டல் செய்யும்படி அனைத்து நம்பிக்கையாளர்களிடமும் தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று தொடங்கிய  இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்,  "நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்" (எச.1:17) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகின்றது என்பதை நினைவூட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரமாணிக்கம் மற்றும் பொறுமையோடு, தம் மக்களை முழு ஒன்றிப்பு நோக்கி உண்மையாக வழிநடத்தும் இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும், ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் ஜனவரி 15,  ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை ஆற்றிய பின்னர், ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை  சிறப்பிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை திருத்தந்தை பிரான்சிஸ் நினைவுகூர்ந்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையும், திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்திற்கான மனமாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி சனிக்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்புத் திருவழிபாட்டை அறிவித்துள்ளேன் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  அப்போது தெரிவித்தார்.