Namvazhvu
09.06.2019 தூய ஆவியார் பெருவிழா
Wednesday, 26 Jun 2019 06:54 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை
துணையாளராம் தூய ஆவி
யாரில் பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்று நம் அன்னை யாம் திருஅவை தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்புவரை கண்டுகொள்ளப்படாத, கடவுளின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவியார் அண்மைக் காலமாகப் பெரிதும் வரவேற்கப்பட்டு ‘ஆண்டவரும் உயிர் அளிப்பவரும்’ என்று நீசே நம்பிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறபடி கொண்டாடப்படுகிறார்; தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனைக்கும் மகிமைக்கும் உள்
ளாக்கப்படுகின்றார். இதற்கு திரு அவையின் தெளிவான கற்பித்தலும் திருநிலையினரின் ஆழமான புரிந்
துணர்தலுமே காரணமாகும். இப் பெருவிழா நாளில் திருஅவை நமக்கு வலியுறுத்திக்கூறும் உண்மை
களும், பரிந்துரைக்கும் செயல்பாடு களும் சில உள்ளன. அவை. இறை வாக்கினர்களின் வழியாகப் பேசிய தூய ஆவியார் தற்போது நமது இதயக் குரலாக உள்ளார். அதற்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவரது வரங்கள், கனிகள், கொடைகளாக நமக்கு அருளப்படுவனவற்றை நாம்
பொதுநன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் செயல்படுவதன் வழியாக நமது வாழ்வு என்றும் இறை ஒளியில் சமூக ஈடுபாட்டுடன் தொடர தூய ஆவியார் நம் ஆண்டவர் இயேசு
வினால் துணையாளராகக் கொடுக்கப்
பட்டுள்ளார். அனைத்து நிலை களிலும் நாம் தூய ஆவியாரைக் கூவியழைத்து தீமைகளிலிருந்து விடுபட்டு, நன்மைகளை உரிமை யாக்கிக் கொள்ள அருள்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். 
முதல் வாசக முன்னுரை:  திருத்தூதர் பணிகள் 2:1-11
கிறிஸ்து உயிர்த்த ஐம்பதாம் நாள். அதாவது பெந்தக்கோஸ்து நாளன்று சீடர்கள் எருசலேமில் ஓர் இல்லத்தில் தங்கியிருந்தனர். அப்போது வல்லமையையும் மிகுந்த தூய்மையையும் வெளிப்படுத்தும் அடையாளங்களான கொடுங்காற்று, நெருப்புப் போன்ற பிளவுற்ற நாக்குகள் வடிவில் தூய ஆவியார் அனைவர் மீதும் வந்து தங்கினார். அப்போது பேசப் பட்ட பலமொழிகள் அங்கு வந்திருந்த பலநாட்டவரின் சொந்தமொழிகளில் புரிந்துகொள்ளப்பட்டன என விளக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம். 
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 104:1, 24, 29 - 30, 31, 34
இரண்டாம் வாசகமுன்னுரை: உரோமையர் 8:8-17    
ஒருவரிடம் இயல்பாகவே தீச்செயல்களை விளைவிக்கும் ஊனியல்பும் அவற்றைச் சாகடிக்கும் ஆவிக்குரிய இயல்பும் உண்டு. நம்முள் குடிகொண்டிருக்கும் தீச்செயல்களை கிறிஸ்துவினால் உள்ளுயிராக நமக்கு வழங்கப்பட்டிருக்கும் தூய ஆவியாரின் துணையால் வென்று, கடவுளின் பிள்ளைக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்போது நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாகி அவரோடு மாட்சியுறுவோம் என விளக்கிக்கூறும் இரண்டாம் வாசகத்துக்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்தி: யோவான் 14:15-16, 23-28
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. ஆற்றலின் ஊற்றாம் அன்பு இறைவா!
எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், திருநிலையினர் ஆகிய அனைவரும், கிறிஸ்துவினால் துணையாளராக வழங்கப்பட்ட தூய ஆவியாரின் கொடைகளை நிறைவாகப்பெற்று, திருஅவையின் முப்பெரும் பணிகளான போதித்தல், புனிதம் செய்தல் மற்றும் வழிநடத்துதல் பணிகளில் உமது திருவுளத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புதுப்பித்துக்காக்கும் அன்பு இறைவா!
எங்கள் தாய்நாட்டை உம் அருட்காவலில் ஒப்படைக்கிறோம். நாட்டுப் பணியாளர்கள் அனைவரும் எம் நாட்டை வளப்படுத்தும் அனைத்தையும் உமது ஆவியாரின் ஆற்றலால் புதுப்பிக்கவும் தங்களிடம் குடிகொண்டுள்ள திறமைகளைப் பொது நன்மைக்கே பயன்படுத்தவும் தீமைகளை வேரறுத்து நன்மைகளை நிலைநாட்டவும் முன்வர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம். 
3. நல்லுறவின் நாயகனே இறைவா!
எங்கள் பங்கு, நிறுவனங்கள், பக்த சபைகள் மற்றும் குடும்பங் களில் உண்மையான, தூய்மையான உறவுகள் மலர்ந்து, வளரும் விதத்தில் நாங்கள் உறவுப்பாலங்களாகத் திகழவும், ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்ற மேலோர்வாக்கினைச் சிந்திக்கவும் தவறுகளை ஏற்றமுறையில் திருத்திட வேண்டிய நிறை ஞானத்தைப்பெற்று வாழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. விழிப்புணர்வு வழங்கும் விண்ணகத் தந்தையே!
எங்களது வாழ்வில் பிரச்சினைகள் பெருகவும், முன்னேற்றம் தடைபடவும் எங்களிடம் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கைகள், முன்னுரிமை வழங்கவேண்டிய செயல்பாடுகளை பின்னுக்குத்தள்ளிவிடும் அறியா மைகள், மாயக்கவர்ச்சிகளில் மூழ்கும் செயல்பாடுகள் ஆகியவை காரணமாகவுள்ளன. இவற்றிலிருந்து நாங்கள் விடுபட,  நீர் எமக்கு நல்ல விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வழிகாட்டும் ஒளிவிளக்கே இறைவா!
மேல்நிலை, கல்லூரி கல்வியில் போதிய மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று தொடர்செயல்பாட்டிற்கு வழியறியாமல், பொருளாதார வசதியில்லாமல் கலங்கி நிற்கும் இளைஞர், இளம்பெண்கள் ஏற்ற துறையைத் தேர்வுசெய்து பயிற்சிகளில் சேரவும், வேலைவாய்ப்பைப் பெறவும் உதவும் கரங்களைத்தந்து நல்ல வழியைக் காட்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.