
வாழ்வு வளம் பெற - 23
அண்டவிடக் கூடாத ஆமை!
- Author எம்.ஏ. ஜோ, சே.ச. --
- Friday, 12 Jul, 2024
‘தேடுங்கள் கிடைக்கும்’ என்ற எனது நூலில் இந்த ஜப்பானிய நாட்டுப்புறக் கதை இருக்கிறது. நாட்டுப்புறக் கதைகளில் விலங்குகள், பறவைகள் எல்லாம் மனிதர்களைப் போலவே பேசும், பாடும், எல்லாம் செய்யும்.
ஊர்க்கோடியில் இந்த மூதாட்டியும், அவரது வயதான கணவரும் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் மிக இளகிய மனம். தேவை என்று யார் வந்தாலும், உதவி என்று யார் கேட்டாலும் தங்களால் முடிந்ததை எப்போதும் செய்யும் தம்பதியர் இவர்கள்.
ஒருநாள் காலை இவர்கள் வீட்டு வாசலில் ஒரு குருவி வந்து நின்றது. குளிரில் அதன் பிஞ்சு உடல் நடுங்குவதையும், அது பசியோடு இருப்பதையும் புரிந்துகொண்ட மூதாட்டி, உள்ளே போய் உணவு எடுத்துக்கொண்டு வந்து வாசலில் நின்ற குருவியின் முன் வைத்தார். அதைச் சாப்பிட்டு முடித்து திருப்தியாய் குருவி சிரித்ததும், மூதாட்டி அந்தக் குருவியின் குளிரைப் போக்க அதனை மெதுவாய்க் கையில் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். குளிர் நீங்கிய மகிழ்ச்சியில் அந்தக் குருவி அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து ஒரு நன்றிப் பாடல் பாடியது. மூதாட்டியும், அவரது கணவரும் அதனை மெய்மறந்து கேட்டனர். நன்றி மறவாத அந்த நல்ல குருவி, மறுநாள் காலையும் அவர்கள் வீட்டு வாசலில் நின்ற அந்த மரத்தில் அமர்ந்து இனிதாய்ப் பாடியது. இது தினந்தோறும் தொடர்ந்தது. விரைவில் மூவரும் இனிய நண்பர்களாய் ஆகிவிட்டனர்.
இவர்களின் வீட்டிற்கு அருகே இருந்த ஒரு வீட்டில் தன்னந்தனியாய் வாழ்ந்த ஒரு பாட்டி இருந்தாள். பக்கத்து வீட்டில் வாழ்ந்த இந்தத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் அன்பாய், அக்கறையாய் இருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்ததை, அந்தப் பாட்டியால் பொறுக்க முடியவில்லை.
இருவராய் இருந்தவர்கள் இப்போது குருவியோடு சேர்ந்து மூவராகி, தினமும் பாடி, பேசி, சிரித்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்து, பற்களை ‘நறநற’வென்று கடித்தாள் அந்தப் பொறாமைப் பாட்டி.
ஒருநாள் குருவி பாடி முடித்தபோது அதற்கு உணவு கொண்டுவர மூதாட்டியும், அவரது கணவரும் வீட்டிற்குள்ளே போக, இந்தப் பொறாமைப் பாட்டி ஒரு பெரிய கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து ‘லபக்’கென்று குருவியைப் பிடித்து, கத்தரிக்கோலால் குருவியின் நாக்கைத் துண்டித்து, தூர எறிந்து விட்டு, “இனி பாடு பார்ப்போம்” என்று நகைத்தாள். அவர்கள் வந்து விடலாம் என்று அவசர அவசரமாய் வீட்டிற்குள் போய் விட்டாள். அதிர்ச்சியையும், வலியையும் தாங்க முடியாத குருவி தொலைவிலிருந்த தன் வீட்டிற்குப் பறந்தது.
‘உணவு கொண்டு வருவதற்குள் குருவி ஏன் பறந்து விட்டது?’ என்று புரியாமல் நின்ற மூதாட்டியும், அவரது கணவரும் மறுநாள் காலைக்காகக் காத்திருந்தனர். ஆனால், மறுநாளும் குருவியைக் காணவில்லை. இப்படி ஒரு வாரம் கடந்த பிறகு, “நம் குருவி நண்பருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லையே! நாம் போய்ப் பார்த்து வருவோம்!” என்று கிளம்பினர்.
இவர்கள் போவதைப் பார்த்தாள் பக்கத்து வீட்டுப் பொறாமைப் பாட்டி. ஆனால், எங்குப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் குருவியின் வீட்டை அடைந்ததும் குருவிக்கு அத்துணை மகிழ்ச்சி! தனது அன்பு நண்பர்களை வரவேற்று, உபசரித்த குருவி, சிலநாள்கள் அவர்களைத் தங்கச் சொன்னது. பக்கத்து வீட்டுப் பாட்டி செய்ததையும், இப்போது குணம் பெற்று வருவதையும் கூறியது. பாட்டியின் செயலால் அதிர்ச்சியடைந்த அவர்கள், முழுக்குணம் பெற்றதும் மீண்டும் வர வேண்டும் என்று வேண்டினர்.
மூன்று நாள்கள் கழித்து, அவர்கள் குருவிக்கு நன்றி சொல்லி விடை கூறியபோது, அவர்கள் இருவரையும் குருவி ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று இரு பைகளைக் காட்டியது. ஒரு கனமான பெரிய பை, மற்றொன்று கனம் இல்லாத சிறிய பை. “இந்த இரண்டில் எது வேண்டுமோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இது ஒரு சிறிய அன்பளிப்பு” என்றது குருவி. மூதாட்டியும், கணவரும் கலந்து பேசிய பின்பு மூதாட்டி சொன்னார், “நாங்கள் இருவர் தானே? எங்களுக்குத் தேவைகள் அதிகம் இல்லை. எனவே, நாங்கள் சிறிய பையை எடுத்துக் கொள்கிறோம்.”
குருவி அன்போடு சிறிய பையை எடுத்து அவர்களிடம் தந்தது.
பையோடு மூதாட்டியும், கணவரும் வீடு திரும்புவதைப் பக்கத்து வீட்டுப் பொறாமைப் பாட்டி பார்த்து விட்டாள். மெல்ல அடியெடுத்து வைத்து வந்து, ஜன்னலுக்குப் பின்னால் ஒளிந்து நின்று, உள்ளே நடப்பதை நோட்டம் விட்டாள். குருவி அன்பளிப்பாகத் தந்த அந்தச் சிறிய பைக்குள் விலையுயர்ந்த தங்க நகைகள், பட்டுத்துணிகள் எல்லாம் இருப்பதைப் பார்த்து மூதாட்டியும், அவரது கணவரும் பெரிதும் மகிழ்ந்தனர்.
பொறாமைப் பாட்டி இதைப் பார்த்ததும் முன்புறம் வந்து கதவைத் தட்டினாள். கதவு திறந்ததும் போலியாய் அழுதாள். “நான் செஞ்சது பெரிய தவறுதான். ஏதோ ஒரு வேகத்துல குருவியின் நாக்கை வெட்டிட்டேன். அதனால அது வீட்டுக்கே போய் மன்னிப்புக் கேட்டாத்தான் என் மனசு நிம்மதி அடையும்” என்றாள்.
குருவியின் வீட்டு முகவரியைக் கவனமாய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு கிளம்பினாள் அந்தப் பாட்டி.
தன் நாக்கை வெட்டி எறிந்த அந்த அரக்கிப் பாட்டியைத் தன் வீட்டு வாசலில் பார்த்ததும் குருவிக்கு அதிர்ச்சி. பாட்டி மன்னிப்புக் கேட்டு நாடகமாடினாள். குருவி அதனை நம்பாவிட்டாலும், வெளியில் அதனைக் காட்டிக்கொள்ளாமல் உபசரித்தது. அவள் கிளம்பும் முன் ஓர் அறைக்கு அழைத்துப் போய் அங்கிருந்த இரு பைகளைக் காட்டி, அந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளச் சொன்னது.
இரு பைகளையும் நன்றாகப் பார்த்த பொறாமைப் பாட்டி யோசித்தாள். ‘மூதாட்டியும், கணவரும் எடுத்து வந்த அந்தச் சிறிய பையிலேயே அத்தனை நகைகளும், பட்டும் இருந்தால், பெரிய பையில் எவ்வளவு இருக்கும்? நான் அவர்களை விட பணக்காரியாக இருக்க வேண்டாமா?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, “நான் பெரிய பையை எடுத்துக்கொள்கிறேன்” என்றாள். குருவி அந்தக் கனமான பையை எடுத்துத் தந்தது. அதனைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, நடக்க முடியாமல் நடந்து வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிற்குள்ளே போய் கதவு, ஜன்னல்களைச் சாத்திவிட்டு அந்தப் பையைத் திறந்தாள். உள்ளே இருந்து ஆயிரக்கணக்கான பூச்சிகள், கிருமிகள் பறந்து வந்து தாக்கின. ஓடிப்போய் அவசர அவசரமாகக் கதவைத் திறந்தாள். அவளையும் தூக்கிக்கொண்டு அவை வெளியே பறந்தன. அன்றிலிருந்து அவளைக் காணவில்லை.
இந்த நாட்டுப்புறக் கதை நமக்குச் சொல்வதென்ன? பொறாமைக்குப் பலியாவோர், யார்மீது பொறாமையோ அவர்களை அழிக்க முயற்சி செய்து, தங்களையே அழித்துக் கொள்கின்றனர். பொறாமை மனத்தில் எப்படித் தோன்றுகிறது? என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது.
அந்தப் பாட்டி பக்கத்து வீட்டு மூதாட்டியோடும், கணவரோடும் தொடர்ந்து தன்னை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். ‘அவர்கள் இருவர். நான் தன்னந்தனியே வாழ்கிறேன். குருவியின் நட்பும், பாட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. எனக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்குப் பொன்னும், பட்டும் கிடைத்திருக்கிறது. எனக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்குக் கிடைத்ததைவிட எனக்கு இன்னும் அதிகமாக வேண்டும்’ என்றே நினைக்கிறாள்.
பொறாமையில் இரண்டு வகைகள் உள்ளதை உளவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றைக் குறிக்க ஆங்கிலத்தில் இருவேறு சொற்கள் உள்ளன. ஒன்று ‘என்வி’ (envy). இதில் இரண்டு பேர்தான் உள்ளனர். ஒருவரிடம் இருக்கின்ற ஒன்றைப் பார்த்து, ‘அது தன்னிடம் இல்லையே’ என்று துயரப்படுவதுதான் ‘என்வி’. அடுத்தவரிடம் உள்ள ‘அது எனக்குக் கிடைத்தால்தான் நிம்மதி’ என்று நினைக்கும் முட்டாள்தனம் இந்தத் துயரத்தில் ஒளிந்திருக்கிறது. மற்றொன்று ‘ஜெலஸி’ (jealousy). இதில் மூன்று பேர் உள்ளனர்.
தன் கணவரின் அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றும் அந்தப் பெண்ணிடம் வெகுநேரம் தன் கணவர் சிரித்துச் சிரித்துப் பேசுகிறார். வீட்டுக்கு வந்த பின்னும் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார் என்பதை உணரும்போது மனைவியின் மனத்தில் வருவதுதான் ‘ஜெலஸி’. ‘என்வி’யில் பேராசை இருப்பதைப்போல ‘ஜெலஸி’யில் பயம் இருக்கிறது.
விலையுயர்ந்த கார் வைத்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்மீது உங்களுக்குப் பொறாமை என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கு வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றினால் என்ன நிகழும்? அந்தக் காரை வாங்க ஏங்கி, எதிர்பார்த்து அதை உங்களால் வாங்கவே முடியாது என்று புரிந்தால், அந்தக் கார் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பயனின்றிப் போக வேண்டும் என்று நினைப்பீர்கள். அதை யாராவது திருடி விட்டாலோ, மோதிச் சேதப்படுத்தி விட்டாலோ உங்கள் மனத்திற்குள் இரகசிய மகிழ்ச்சி தோன்றும். அப்படி எதுவும் நிகழாவிட்டால், இரவில் நீங்களே போய் அதைச் சேதப்படுத்திவிட்டு வரத் தோன்றும். உள்ளிருக்கும் பொறாமை தூண்டிக்கொண்டே இருக்கிறது. ‘போ, சேதப்படுத்து, அகற்று, அழித்து விடு.’ அந்தத் தூண்டலுக்குச் செவிமடுத்துச் செயல்பட்ட மறுகணம் நீங்கள் குற்றவாளி ஆகி விடுகிறீர்கள். அதன் பிறகு நீங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ‘ஒத்தெல்லோ’ எனும் சோக நாடகம் முழுவதும் பொறாமை காட்டாற்று வெள்ளமாய்ப் பொங்கிப் பெருகி, அத்தனை பேரையும் அடித்துக்கொண்டு போவதைப் பார்க்கலாம். தனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கிய பதவி தனக்குக் கிடைக்காமல், கேசியோ எனும் இளைஞனுக்குக் கிடைத்ததால் அவனை அழிக்க நினைக்கும் இயாகோ. தனக்குக் கிடைக்காத அழகி டெஸ்டிமோனா காதலித்து மணந்து கொண்ட ஒத்தெல்லோவை ஒழிக்க வேண்டும் என்று அலையும் ரொடரிகோ. இந்த இருவரின் பொறாமை மற்றவர்களையும், இறுதியில் அவர்களையும் அழித்துத் தீர்த்து விடுகிறது.
மற்ற இடங்களில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போடக்கூடிய கொடிய விலங்கு பொறாமை. உடன்பிறந்தோர்மீது கூட பொறாமை ஏற்படலாம். மோசேவின் சகோதரி மிரியாமும், சகோதரர் ஆரோனும் தங்களை மோசேவோடு ஒப்பிட்டுப் பொறாமையில், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்று முறையிட, கடவுள் பொறாமைக்குப் பலியான மிரியாமை எப்படித் தண்டித்தார் என்பதைப் படித்துப் பாருங்கள் (எண் 12:1-16).
வளமை குன்றாமல் நம் வாழ்க்கை எப்போதும் இருக்க, ஒருபோதும் பொறாமை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொறாமை எண்ணங்கள் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவற்றை வளர விடாமல் களைகளை அகற்றுவதுபோல உடனே அகற்றிவிட வேண்டும்.
நம்மிடம் இல்லாமல் மற்றொரு நபரிடம் இருப்பனவற்றை எண்ணாமல், பிறரிடம் இல்லாமல் நம்மிடம் உள்ள நன்மைகளை நினைக்கப் பழக வேண்டும். “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? காலில்லாதோரைக் கண்முன் நிறுத்தினால் ‘எனக்குச் செருப்பு இல்லையே?’ என்று முறையிடத் தோன்றுமா? நமக்குக் கடவுள் தந்தவற்றை நினைத்து, மகிழ்ந்து, நன்றிகூறி, அவற்றை வளர்த்து, மேம்படுத்தி இறைவனுக்காகவும், பிறருக்காகவும் பயன்படுத்தி வருவோர், பொறாமை மனத்திற்குள் நுழையப் பார்க்கும்போதே அதனை அதட்டி, விரட்டி விடலாம்.
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தியாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்பிவையுங்கள்.)
Comment