No icon

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது..

சென்னை: கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை (ஜன.29)காலையில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும், மாலையில் மாநில மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி காவல்துறையில் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவரான ஆர்.எஸ்.தேவா என்பவர் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனு அளித்துள்ளார். இதனை பரிசீலித்த போலீஸார், பேரணி மற்றும் மாநாடு நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது.

காவல்துறையின் இந்த உத்தரவை ரத்து செய்து எழுச்சி பேரணி மற்றும் மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.தேவா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்தோஷ் வாதிடுகையில், "பேரணி நடத்த அனுமதி கோரும் ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் இருந்து மஞ்சக்குப்பம் திடல் வரையிலான சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆகும். அங்கு பேருந்து - ரயில் நிலையங்களும் அமைந்துள்ளன. மேலும், அரசு மருத்துவமனையும் இருப்பதால் ஆம்புலன்ஸ்கள் அங்கு அடிக்கடி சென்று வரும். அதுமட்டுமல்லாமல், பிற மத வழிபாட்டுத்தலங்களும் அங்கு அமைந்திருப்பதால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான், அங்கு இந்து மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநில மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதான இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அதே சமயம், மாநில மாநாட்டை மட்டும் ஜனவரி 29-ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Comment