ஜோ. விண்ணரசன் , மேல்வழி. கள்ளக்குறிச்சி
யார் உயர்ந்தவர்???
- Author Vinnarasan Joe --
- Thursday, 23 Apr, 2020
காட்டு வழியே கடந்து சென்றான்
நாட்டுப் புறத்து மனிதன்
வீட்டு நகைகள் விற்றுத் தனது
பாட்டை மெல்ல நகர்த்த
நோட்ட மிட்ட கள்வர் கூட்டம்
போட்டுத் தாக்கி பறித்து
ஓட்ட மிட்டு ஒளிந்து போயினர்
மாட்டிக் கொள்ள மறுத்து
குற்று உயிராய் கிடந்தா னவன்
இதயம் மெல்லத் துடிக்க
மற்ற யவர் உதவினா லவன்
உதய மென்றே தவிக்க
வேதம் குடித்த ஞானி ஒருத்தர்
போகும் வழியில் பார்த்தார்
ஓதும் தனது கடமை எண்ணி
மேவும் பயணம் காத்தார்
உயர்ந்த சாதியாய் மெச்சிக் கொள்ளும்
செல்வ சீமானும் தொடர்ந்தார்
தாழ்ந்த சாதியாய் இருப்பா னென்றெண்ணி
செல்லும் இடமே நகர்ந்தார்
தொட்டால் தீட்டு என்று ஒதுக்கிய
பட்டி காட்டான் வந்தான்
விட்டால் மடிந்து போவா ரென்றெண்ணி
கட்டி அணைந்து கொண்டான்
பயணம் வந்த குதிரையில் ஏற்றி
மருத்துவ மனைக்குச் சென்றான்
பணத்தை செலுத்தி சிகிச்சை நிகழ்த்தி
மனிதம் காத்து வென்றான்
யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?
எவர் என்பது தெரியும்
வான் உயர்தவர் வார்த்தை யானவர்
வழி நடந்தால் புரியும்
Comment