No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம் - 26

மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி மறைத்தளங்கள்

கி.பி 1594-இல் தந்தை கொன்சால்வ் பெர்னாண்டஸ் அவர்களால் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்தவம், 1606-இல் அருள்தந்தை இராபர்ட் தெ நொபிலியின் வருகைக்குப் பிறகு தனது நற்செய்தி வேர்களை விவேகமாக, வேகமாக வேரோடச் செய்தது. 1610 - இல் நொபிலிக்கு உதவியாக வந்த இறையியல் பேராசிரியர் தந்தை விக்கோ, 28 ஆண்டுகள், 1638, அக்டோபர் 18 அன்று தான் இறக்கும் வரை மதுரையில் பணியாற்றினார். நொபிலி திருச்சி மற்றும் கொங்கு நோக்கி தனது நற்செய்திப் பயணத்தைத் திருப்பிய பிறகு, தந்தை விக்கோ மதுரைப் பகுதி கிறிஸ்தவர்களின் பொறுப்பை ஏற்றார். இவருக்கு உதவியாகத் தந்தையர் ஆந்த்ரே புக்காரியோ, கொன்சால்வ் மற்றும் வாங்கே தொமினிங்கோ வெவ்வேறு காலக்கட்டங்களில் உதவினர்.

மதுரையின் முதல் மறைப்பணியாளர் தந்தை கொன்சால்வ் முதுமையின் பொருட்டு 1618-இல் கொச்சின் சென்றார். இறுதி நாள்களைத் தூத்துக்குடியில் கழித்து, 1621, ஏப்ரல் 6 அன்று மறைந்தார். இறக்கும் வரை நொபிலியின் மலபார் வழிபாட்டு முறைக்கு எதிராகச் செயல்பட்டு வந்தார்.

தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு நொபிலி சென்றாலும், அவ்வப்போது மதுரைக்கு வந்து, அதன் சுற்றுப்புறங்களில் புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கினார். தனது பழைய தங்குமிடத்தில் வாழ்ந்த ஏறக்குறைய 20 கள்ளர் சாதியினருக்கும், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 250 பேர்களுக்கும் திருமுழுக்களித்தார். இருப்பினும், 50 ஆண்டுகளைக் கடந்தும் 1653-இல் மதுரை மாநகரில் 200 கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தனர். இந்நகரில் புனித பனிமய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்தது. போர் மற்றும் பஞ்சத்தால் 1656-59 ஆகிய ஆண்டுகளில் மதுரை பாதிக்கப்பட்டபோது தந்தை பெரையரா இரக்கக் குணத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றினார். தந்தை எத்தியன்தேர்ஸ் கூனம் பட்டியில் 1659, ஏப்ரல் 20 அன்று மரித்தார். பண்டார சுவாமி மனுவேல் ரோட்ரிக்ஸ் 1674-இல் 110 பேர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

மதுரையில் முதன் முதலில் எழுப்பப்பட்ட குருசடி மைசூர் படைகளால் 1681-இல் தரைமட்டமாக்கப்பட்டது. 1698-ஆம் ஆண்டு கள்வர்கள் அடிக்கடி மதுரைக்குள் நுழைந்து பொருள்களைத் திருடிச் சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால், குறுகிய காலத்தில் கள்வர்கள் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட, அமைதி திரும்பியது.

தந்தை அகஸ்டின் கப்பல்லி என்ற வேதபோதகர் 1711-இல் கழுகர்கடைக்கு வந்தபொழுது மூன்று நாள்களாகப் பிரசவ வலியால் துடித்த பெண்ணைப் புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் பெயரால் ஆசீர்வதித்து, சுகப்பிரசவம் நடைபெற உதவினார். இதனால் அப்பெண்ணும், அவர் குடும்பத்தாரும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். அங்கு புனித பிரான்சிஸ் சவேரியாருக்குத் தந்தை ஒரு சிற்றாலயம் எழுப்பினார். ஆரியப்பட்டியில் 608 பேர்களுக்குத் திருமுழுக்களித்து, அவ்வூரின் ஆலயத்தைப் புனரமைத்தார். மேலும், மறவ நாட்டில் தந்தை வேதபோதகர் 2000-க்கும் மேற்பட் டோருக்கு 1714 - இல் திருமுழுக்குக் கொடுத்தார். இவ்வாறு அர்ப்பணிப்போடு பணியாற்றிய தந்தை கப்பல்லி தனது 33-வது வயதில் 1715, ஜூலை 4 அன்று கழுகர்கடையில் மரித்தார். இன்று வேதபோதகரின் கல்லறை மக்கள் நம்பிக்கையுடன் சென்று வழிபடும் திருத்தலமாகத் திகழ்கின்றது.

மதுரை நாயக்கரால் பெரும் துன்பத்தைத் தந்தை சேவியர் ரிக்கார்டி அனுபவித்தார். மேலும், தனிச்சியம் ஆலயம் அழிக்கப்பட்டது. 1716- இல் செம்பட்டியில் தந்தை வீரமாமுனிவர் ஓர் ஆலயம் அமைத்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. 1729 - ஆம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோயில், ஏராளமான கால்நடைகள் மரித்தன. எனவே, தந்தை வின்சென்ட் பெரேரோ வழிகாட்டுதலில் புனித அந்தோணியாருக்கு விழா எடுத்து மன்றாடினார். அதன் பிறகு அக்கொள்ளை நோய் நீங்கியது.1730 முதல் அரசின் தடைகளால் மதுரையில் மறைப்பணி ஆற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. 1740 - இல் மராத்தா படைகள் மதுரையில் இருந்த போதும், அப்படையில் பணியாற்றிய கிறிஸ்தவர் களின் துணையால் மதுரை புனித பனிமய அன்னை ஆலயம் காப்பாற்றப்பட்டது. 1749-ஆம் ஆண்டு தகவல்படி மதுரை மறைத்தள பறையர் கிறிஸ்தவர்களைத் தந்தை பியர் மகல் அவர்களும், ஆந்திரா இடைநிலைச் சாதிக் கிறிஸ்தவர்களைத் தந்தை ஜேக்ஸ் ஹார்ட்மேனும் கண்காணித்து வந்தனர்.

காமநாயக்கன்பட்டி மறைத்தளம்

இன்றைய விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கிறிஸ்தவம் பரவுவதற்கு நடுவமாக 17-ஆம் நூற்றாண்டில் காமநாயக்கன்பட்டி திகழ்ந்தது. மதுரை நகருக்கு அப்பால் தெற்கு நோக்கிய பயணத்தில் அமைந்த அனைத்து நாட்டுப்புறப் பகுதிகளுக்கும் காமநாயக்கன்பட்டி மறைத்தளம் கிறிஸ்தவத்தை எடுத்துச் சென்றது.1644-ஆம் ஆண்டில் கயத்தாறில் 18 கிறிஸ்தவர்களும், புனித சந்தியாகப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் இருந்தது. இப்பகுதியில் அருள்தந்தையர்கள் தங்கவில்லை, மாறாக, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து தூத்துக்குடி மற்றும் கோட்டாறு செல்கின்றபோது இப்பகுதி வாழ் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிகப்பணி ஆற்றிச் சென்றனர். வேத கலாபனை, பஞ்சம் போன்ற காலங்களில் மட்டும் சில மாதங்கள் இப்பகுதியில் மறைவாகத் தங்கி வாழ்ந்தனர். இவ்வாறு ஞான மேய்ப்பர்கள் முறையாக இல்லாத போதும், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்தனர்.

ஒப்புரவு அருள்சாதனம் பெறுவதற்குத் தூத்துக்குடி கடற்புரத்திற்குத் தொலைதூரம் நடந்து சென்றனர். மேலும், திருமுழுக்கு, திருமணம் போன்ற திருவருள்சாதனங்கள் பெற கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்திற்கு மூன்று நாள்கள் நடந்து சென்றனர். கயத்தாறில் 115 கிறிஸ்தவர்களும், ஓர் ஆலயமும் இருப்பதாகத் தந்தை பல்தசார் தெ கோஸ்தா 1653-இல் பதிவு செய்துள்ளார். இவ்வழியாகக் குருக்கள் கடந்து சென்றபோதெல்லாம் 10-15 நபர்களுக்குத் திருமுழுக்களித்தனர். இப்பகுதியில் வாழ்ந்த பால் என்ற உபதேசியார் மக்களுக்குச் சிறந்த முறையில் செபங்களைக் கற்றுக் கொடுத்து, திருமுழுக்குப் போன்ற திருவருள் சாதனங்களுக்குத் தயாரித்து வந்தார்.

பொதுநிலையினரின் சாட்சிய வாழ்வு

உயர்குடியைச் சார்ந்த சாந்தாயி என்ற இளம் பெண் கிறிஸ்தவத்தைத் தழுவி, ஒடுக்கப்பட்ட மக்களோடு உறவாடினாள். இச்செயலைக் கண்ட அவளின் பெற்றோர் மிகவும் கொடுமைப்படுத்தினர். இதனையறிந்த அருள்பணியாளர் கிறிஸ்தவ பொது வழிபாட்டிலிருந்து அப்பெண்ணுக்கு விலக்களித்து, தனிப்பட்ட முறையில் ஒரு சுரூபத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட அப்பெண், “கிறிஸ்துமஸ் மற்றும் பாஸ்கு பெருவிழா நாள்களில் ஆலயத்தில் பங்கெடுப்பேன்; அப்போது வீட்டு வாசலில் என் பெற்றோர் வாள்களை வைத்தாலும் தாண்டி வருவேன், கடல் சூழ்ந்து வந்தாலும் நீந்தி வருவேன்” என அக்குருவானவரிடம் தனது ஆழமான இறை நம்பிக்கையை வெளிப்படுத்தினாள். சாந்தாயி கிறிஸ்துவின் பெயரால் செபித்துக் கொடுத்த நீரைப் பருகியவர்கள் பலர் நலம் பெற அவளது இல்லம் ஒரு மருத்துவமனை போல் செயல்பட்டது.

கயத்தாறு பகுதியில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதைத் தந்தை அந்தோணி தெ புரவென்சா 1656, செப்டம்பர் 20 அன்று எழுதிய மடலிலிருந்து அறிய முடிகிறது. கயத்தாறு ஆலயத்தில் ஞானக் காரியங்களுக்கு மக்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார் உபதேசியார் கான்ஸ்டன்டைன். அப்போது மணியக்காரர் சில கலவரக்காரர்களுடன் அத்துமீறி ஆலயத்தில் நுழைந்து உபதேசியாரை வெறி கொண்டு தாக்கினர். இதனால், அவர் வாயிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்தார். பின்னர் அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்று சிறையில் அடைத்து, ஆலயத்தைச் சூறையாடினர். இக்கொடுமைகளைத் தட்டிக்கேட்ட கிறிஸ்தவர்களை அடித்து விரட்டினர். ஆனால், அவர்கள் திரண்டு சென்று மணியக்காரரிடம் இருந்து உபதேசியார் கான்ஸ்டன்டைன் அவர்களை மீட்டுச் சென்றனர்.    

(தொடரும்)

Comment