No icon

கார்ப்பரேட் நண்பர்கள்

கார்ப்பரேட் ஆட்சி

இந்து ராஷ்டிரம் என்பது, வெறும் காவி ஆட்சி மட்டுமில்லை; கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியுமாகும். பா.ஜ.க. ஆட்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கு பொற்கால ஆட்சியாகும். அதிலும் குறிப்பாக அம்பானி, அதானிகளுக்கான பொற்காலமாகும்.

5ஜி சேவை, அதிமிக வேகத்துடன் தொலை தொடர்பு சாதனங்களை செயல்பட வைக்கும் திறன் கொண்டது. 5ஜி அலைக்கற்றை ஏலம், நாட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ரூ. 4.3 லட்சம் கோடிக்கு போக வேண்டிய ஏலம், ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

 மத்திய அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட் நண்பர்கள் அம்பானி, அதானி, ஏர்டெல், வோடஃபோன் ஆகியோரின் கம்பெனிகள் மட்டுமே பங்கு கொண்டு, ஏலம் எடுத்துள்ளன. அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL) புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ், ஜியோ மட்டும் 8,800 கோடிக்கு, 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது.

மிகவும் குறைவான 2ஜி அலைக்கற்றை ரூ.1.76 கோடிக்கு ஏலம் கொடுக்க வேண்டியதை, குறைந்த விலைக்கு விற்றார் என்று, அன்றைய தொலைதொடர்பு துறை அமைச்சர் அ.ராசா, ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தானே வாதாடி விடுதலை பெற்றார். இப்போது இந்த 5ஜி ஊழல் அதிர்ச்சி அளிக்கிறது. இது கார்ப்பரேட் ஆட்சி என்பதை நிரூபிக்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகள் வளர்ச்சி

கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தியாவில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துகொண்டே உள்ளது. 2014 ஆம் ஆண்டு, நவம்பரில் மோடியின் ஆஸ்திரேலியா பயணம், அதைத் தொடர்ந்து 200 கி.மீ. குறுகிய இரயில் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசிடமிருந்து அதானி பெற்றார்.

2015 ஆம் ஆண்டு ஜூனில் வங்கதேசம் பயணித்தார் மோடி. அவ்வாண்டில் வங்கதேசத்தில் ரிலையன்ஸ் குழுமம், அதானி குழுமம் இரண்டும் சேர்ந்து 4.5 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு, அந்நாட்டு மின்வாரியத்திடமிருந்து ஒப்புதல் பெற்றது.

2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் என தொடர்ச்சியாக பலமுறை மோடி ஜப்பான் சென்றதன் பயனாக, 2018 இல் அதானி குழுமம், ஜப்பானின் என்.ஒய்.கே. ஆட்டோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, ஆட்டோமொபைல், சரக்கு இரயில்களை இயக்க ஒப்பந்தம் பெற்றது.

2015 ஆம் ஆண்டு,  ஜூலை  மாதத்தில் மோடியின் ரஷ்யப் பயணத்தை அடுத்து, ரிலையன்ஸ் குழுமத்துடன் அல்மஸ் அண்டே என்ற ரஷ்ய வான் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

2016 ஆம் ஆண்டு, அமெரிக்கப் பயணம். அதையொட்டி அமெரிக்கப் போர் கப்பல்களை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸூக்கு கிடைத்தது.

2015 ஆம் ஆண்டு, மலேசிய பயணம். அதைத் தொடர்ந்து, அதானிக்கு துறைமுகத் திட்டம்… என இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அரசு நிறுவனம் புறக்கணிப்பு

இந்த விவகாரம் குறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின், அகில இந்திய உதவிப் பொதுச்செயலாளர் எஸ். செல்லப்பா “5ஜி ஏலத்தில் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இன்னமும் 4ஜி சேவையை முழுமையாக வழங்க முடியாமல் பி.எஸ்.என்.எல் தவித்து வரும் நிலையில், தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், நேரடியாக 5ஜி சேவைக்கு வருகிறது. இதற்கு முன்பு நடந்த அலைக்கற்றை ஏலத்தின்போது, பெயருக்காவது பி.எஸ்.என்.எல் பெயரைக் குறிப்பிடுவார்கள். இந்த முறை அதுவும் இல்லை. தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மத்திய அரசு, தன் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடித்து வருகிறது” என்று கூறுகிறார்.

தனியார் துறைக்கு ஆதரவு அளித்து, பொதுத்துறை நிறுவனங்களை அழித்துக்கொண்டு வருகிறது.

கார்ப்பரேட் ஆட்சி

மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், அதானி கம்பெனிக்கு இலங்கை அரசு சூரிய ஒளி உற்பத்தி ரூ.4000 கோடிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.

2014-15 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கிடையில் செயல்படுத்தப்பட்ட பட்ஜெட் ஆவணங்களின் படி, கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு 6.15 லட்சம் கோடி அளவிலான பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் செலுத்தும் வரியை 30 சதவிகிதத்திலிருந்து, 25 சதவிகிதமாக குறைத்ததன் மூலம் 1.45 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த எட்டாண்டுகளில் 10.72 லட்சம் கோடி, வாராக்கடன்கள் மோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை 100 கோடிக்கு அதிகமாகப் பெற்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்கள்.

2014-15 லிருந்து 2021-22 வரையில் 4.86 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றுள்ளார்கள். தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ், இரயில் பாதைகள் மற்றும் நிலையங்கள், சாலைகள், தொலைத்தொடர்பு அமைப்பு, மின்சாரத்துறை, எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் என 6 லட்சம் கோடி மதிப்பிலான பொதுச்சொத்துகளை 40 ஆண்டுகள் குத்தகைக்குவிட தீர்மானித்துள்ளார்கள். குத்தகை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம்தான்.

 பல ஆண்டுகளாக தொழிலாளர்களின் கடின உழைப்பாலும், மக்களின் வரிப்பணத்தாலும் உருவான பொதுச் சொத்துகளை, மொத்தமாக கார்ப்பரேட்களுக்கு விருந்து படைப்பதே இதன் நோக்கமாகும்.

2014 லிருந்து 2019 வரையிலான காலத்தில் அம்பானி, அதானிகளின் சொத்து மிகப் பிரம்மாண்டமான அளவில் உயர்ந்துள்ளது. இக்காலத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு, 118 சதவிகிதம் அதிகரித்து, 1.68 லட்சம் கோடியிலிருந்து, 3.65 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது.

அதானியின் சொத்து மதிப்பு, 121 சதவிகிதம் உயர்ந்து, 50.04 ஆயிரம் கோடியிலிருந்து, 1.1. லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2014 இல் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 11 ஆவது இடத்திலிருந்த அதானி, 2019 இல் இரண்டாவது இடம் பிடித்திருந்தார். இப்போது அதானி உலகத்தில் 4 ஆவது பணக்காரராக உயர்ந்துள்ளார்.

இவ்வாறு, கார்ப்பரேட் ஆட்சி தொடர்கிறது. ஏழைகள் வாழ்வை இழந்து வருகின்றனர். வரிச்சுமையால் வாடுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒற்றுமையாக களத்தில் போராடினால் நீதி கிடைப்பது உறுதி.

Comment