No icon

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா

ஓர் அருங்கொடைக் கொண்டாட்டம்

நாம் வாழும் இந்தப் பூமியையும் இந்தப் பூமியை உள்ளடக்கிய பிரபஞ்சத்தையும் உண்டாக்கிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று மனிதர்களில் நிறையப் பேர் நம்புகின்றனர். இங்கே மனித உயிர் வாழ்வு என்பது இறைவனின் அளப்பரிய கொடை என்பதும் அனேகரின் நம்பிக்கை. ஆதலின் நம்மைப் படைத்த இறைவனை வணங்கவும் வாழ்த்தவும் நன்றி செலுத்தவும் பல்வேறு முறைகளில் வழிபாடுகள், சடங்குகள் செய்கின்றனர். இதனால் இறைவனை நெருங்கிச் சேர வேண்டும் என்பதும், இறைத் திருவுளம் கண்டறிய வேண்டும் என்பதும் ஆழமான இறையனுபவத்தில் வாழ வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.

இறைநம்பிக்கை கொண்டுள்ளோரில் கிறிஸ்தவர்கள் தனிச் சிறப்புடன் விளங்குகின்றனர். கடவுள் மூன்று ஆட்களாயும் அதே வேளையில் ஒருவராகவும் இருக்கிறார் என்றும், அவரில் இரண்டாம் ஆளாகிய இறைமகன், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிராமல் தம்மைத் தாழ்த்தி, வெறுமையாக்கி, அடிமை வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பாகி, மனித உருவில் தோன்றினார் என்பதே (பிலி 2:6-7) நம்பிக்கை. அவ்வாறு வார்த்தையாயிருந்து மனிதராய் வந்தவரே இயேசு கிறிஸ்து.

இயேசுஎன்னும் பெயருக்கு நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்பவர் என்பது பொருள் (மத் 1:21). இறை மகனாகிய இயேசுவை நாம் நமது சொந்த மீட்பராக ஏற்றுக் கொள்வதால் நிலைவாழ்வு நமக்கு உறுதியாகிறது. இறைவனின் இலவசக் கொடையால் மீட்கப் பெற்ற நாம் இவ்வுலகில் வாழும் நாட்களிலெல்லாம் நற்செயல்கள் மிகுந்த அன்புப் பணிகளால் இம்மீட்புக்குச் சான்று பகர வேண்டும். ஏனெனில் செயல்கள் இல்லாத நம்பிக்கை செத்த நம்பிக்கை என்பது இறைவாக்கு (யாக் 2:26).

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள் திருமுழுக்கின் வாயிலாக திருஅவையில் உறுப்பினராகி இறைமக்கள் கூட்டத்தில் இணைகின்றனர். இவர்கள் ஒரே குடும்பமாக இறைவனை வழிபட்டு வாழ்கின்றனர். இத்தகையக் கிறிஸ்தவ சமூகத்தில் இறை வழிபாடுகள் பலவிதம். கீழை ரீதி, லத்தீன் ரீதி, ஆர்த்தோடாக்ஸ்... என்று பலப்பல சடங்கு முறைகள் உள்ளன. திருப்பயணங்கள், பக்தி முயற்சிகள் என்று பாமர மக்களின் பாரம்பரிய வழிமுறைகளும் உள்ளன. மேலும் காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய முறையில் வழிபடும் முறைகளும் முளைத்துள்ளன.

இத்தகைய வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து பார்த்தால் அவற்றுள் இறைவனைப் புகழ்தல், மன்னிப்பு வேண்டல், தூய ஆவியின் துணை வேண்டல், மன்றாட்டுகள் எடுத்துரைத்தல், பரவச இறையனுபவம் பெறுதல், நன்றி சொல்லுதல், இறை வார்த்தையைப் பயன்படுத்துதல் ஆகிய பண்புகள் அமைந்துள்ளன. இவற்றால் இறைமக்கள் இறைவனைத் தேடி, இறை புகழ் பாடி, நாடி ஓடி, இதய அமைதி பெறுகின்றனர். நதிகள் அனைத்தும் கடலில் சங்கமிப்பது போன்று இவ்வழிபாட்டு முறைகள் இறை அனுபவத்தில் முழுமை பெறுகின்றன.

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழா நிகழ்வுகளைத் தொகுத்துத் தந்துள்ள நற்செய்தியாளர்களின் எழுத்துக்களிலும் இத்தகையஒரு வழிபாட்டுப் பாணிதென்படுகிறது. ஆதலின் இக்கண்ணோட்டத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை ஓர் அருங்கொடைக் கொண்டாட்டம் என்று பார்க்கவும் பரவசமடையவும் விரும்புகிறேன். அதனையே ஈண்டு எழுதுகிறேன்

1. கனவுகளும் காட்சிகளும்

பெந்தகோஸ்து பெருவிழா நாளில் அருளுரை ஆற்றிய திருத்தூதர் பேதுருஇறுதி நாள்களில் மாந்தர் யாவர் மேலும் தூய ஆவியார் பொழியப்படுவார் என்றும் அதன் விளைவாக இறைவாக்குரைக்கும் வரம் வெளிப்பட்டு இளைஞர்கள் காட்சிகளையும் முதியோர் கனவுகளையும் காண்பர்என்கிறார் (திப 2:16-17 யோவேல் 2: 28-32) நிறைவுக் காலத்தில் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ள இந்த அருள்கொடை தொடக்கக்காலத் திருஅவையில் ஏராளம் நிகழ்ந்ததாகத் திருத்தூதர் பணிகள் நூல் விவரிக்கிறது. (திப 10:3, 9-11; 16:9; 19:8; 22:17,18; 23:11; 27:23,24). இந்த அருட்கொடை இக்காலத்திலும் முக்கியத்துவம் பெற்று வளர்கிறது.

எனது ஆசான் அமரர் அருள்திரு மு. வல்தாரிசு அவர்கள்குணமளிக்கும் பணியே குருத்துவப் பணிஎன்னும் நூலிலும்கனவுகள் வழி குணப்படுத்துவதுஎன்னும் நூலிலும் இது குறித்து அருங்கொடைப் பணியாளர்களுக்கு ஆழமான பயிற்சிகள் தந்துள்ளார்கள். கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளிலும் இவை நிறைந்துள்ளதை ஈண்டு காண்போம்

மங்கள வார்த்தை நிகழ்வில் மரியாவுக்கு கடவுள் கபிரியேல் என்னும் தூதன் மூலமே செய்தி அனுப்பினார். (லூக் 1:26,27). மரியாவுக்குத் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த யோசேப்புக்கு கனவின் வாயிலாகவேஉம் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம்என்று கூறி இறை வெளிப்பாட்டிற்குக் கீழ்ப்படியச் செய்தார் (மத் 1:18-20) மேலும் யோசேப்பு கனவுகள் வழியாக மட்டுமே இறைச் செய்தியைப் பெற்றுப் பணிந்தார். ஏரோதிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் (மத் 2:12) என்றும் குழந்தை இயேசுவைக் காப்பாற்றச் செய்தல் (மத் 2:13; 19,22) என்றும் கனவுகள் வழியாகவே இறைச் செய்தியைப் பெற்றார்.

கனவுகள் எனப்படுபவை மனிதனின் மனத்தின் வழியாக எண்ணங்கள், நினைவுகள், காட்சிகள் போன்றவை ஆழ்ந்த தூக்கத்தில் வெளிப்படுபவையாகும். காட்சிகள் எனப்படுபவை விழித்திருக்கும் போது கனவு காண்பது போன்ற ஒரு மெய்மறந்த நிலையில் ஏற்படும் அனுபவமாகும். முற்காலத்தில் பல்வேறு முறைகளில் பேசிய கடவுள் (எபி 1:1) கனவுகள், காட்சிகள் வழியும் தமது திருவுளத்தை வெளிப்படுத்தியுள்ளார். (எண் 12:6). ஆனால், தம் மகன் இயேசு கிறிஸ்துவில் வெளிப்பாடுகள் முழுமையாகிவிட்டன. ஆதலின் நாம் இனி கனவுகள் காட்சிகளைத் தேடி அலையத் தேவையில்லை. ஒருவேளை சில குறிப்பிட்ட நபர்களில் கனவுகள் காட்சிகள் வழியாகக் கடவுள் இயேசு வருவாரென்றால் அவற்றை இறை வார்த்தையின் ஒளியில் ஆய்ந்து பொருள் காண வேண்டும். ஏனெனில் போலிகளும் உண்டு என எச்சரிக்கை உள்ளது (இச 13:1-5) கனவுகள், காட்சிகள் பெறுகிறவர்கள் தற்பெருமைக்கு இடந்தராமல் இருக்க வேண்டும் (2 கொரி 12:1,7).

2. இறை வார்த்தையும் நம்பிக்கையும்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் "இறைவெளிப்பாடுஏடும் திருத்தந்தை பெனடிக்டின்ஆண்டவரின் அருள்வாக்கு திருத்தூது மடலும் திரு அவையின் வாழ்விலும் வழிபாட்டிலும் இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை மீட்டுத் தந்தன. இன்றைய காலத்தில் நமது வழிபாடுகளிலும், பக்தி முயற்சிகளிலும் இறைவார்த்தை முதன்மைப் படுத்தப்படுகின்றது. கிறிஸ்து பிறப்பு நிகழ்விலும் இறைவார்த்தையின் முதன்மைச் சிறப்பினைக் காணுகிற நாம் நமது அருள் வாழ்விலும் இறைவார்த்தைக்கும் நம்பிக்கைக்கும் முதலிடம் தருவோம்.

உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்என்று சொல்லி மரியா தன்னைக் கையளித்தார் (லூக் 1:34,38). “இறைவனின் வார்த்தையை ஒரு கருவாய் தன் வயிற்றில் ஏற்கும் முன்னே, இதயத்தில் அதனை ஏற்றவர் மரியாஎன வார்த்தையின் வழிநடக்கும் மரியாவை புனித அகுஸ்தினார் பாராட்டுவது இங்கு நினைவு கூறத்தக்கது. மேலும் கன்னி கருத்தாங்குவார் என்பது எசாயா இறைவாக்கினரின் கூற்று (மத் 1:22, எசா 7:14). “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே நீர் பேறுபெற்றவர்என்றும் எலிசபெத்தின் வாழ்த்திலும் இறைவார்த்தை ஆன்மீகமே உயர்ந்து நிற்கிறது. மரியாவின் புகழ் பாடலின் இறுதியில்மூதாதையருக்கு உரைத்த படியேஎன்னும் சொல்லாடலிலும் இவ்வுண்மை ஒளிக்கின்றது (லூக் 1:54). மெசியா எங்கு பிறப்பார் என்பதை மறை நூலைத் தேடியேபெத்லகேம்என அறிஞர் ஏரோதுக்கு அறிவித்தனர் (மத் 2:6; மீக் 5:2) திருக்குடும்பம் எகிப்துக்குத் தப்பிச் சென்றதும், மாசில்லாக் குழந்தைகளின் கொலையும் இறைவாக்கின் நிறைவேறுதலே (மத் 2:15; ஒசே 11:1; மத் 2:17; எரே 31:5). விருத்தசேதனச் சடங்கும் இறைவாக்கின் கீழ்ப்படிதலுக்காகவே (லூக் 2:21-24) நடைபெற்றது.

குழந்தை இயேசுவோ உடலெடுத்த வார்த்தை; திருவிவிலியமோ எழுதப்பட்ட வார்த்தை. நாம் வார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அதில்தான் நமது நம்பிக்கையை வேரூன்ற வேண்டும் (1 கொரி 12:9; எபி 11:13, எபே 6:16; மத் 4:4,7,10, திவெ 12:11).

3. அற்புதங்களும் அடையாளங்களும்

புதுமைகளிலெல்லாம் பெரும் புதுமைகிறிஸ்துவின் பிறப்புஎனலாம். ஏனெனில் ஆணின் துணையின்றி ஒரு கன்னி கருத்தரித்தார். இது எளிதில் நம்பக் கூடியதா? உருவம் இல்லாத அருவம் ஆன கடவுள் மனிதர் ஆனார். சிந்திக்கக் கூடியது! நம்பிக்கைக் குறைபாட்டினால் குரு செக்கரியா பேச இயலாதவர் ஆனார். கேள்விப்படாதது! ஞானிகளை விண்மீன் வழிகாட்டி ஒரு குழந்தையிடம் அழைத்து வந்தது. ஆய்வுக்கு எட்டாதது! ஆம். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக் 1:34-37)

தூய ஆவியின் ஆற்றலைச் சார்ந்திருந்த போது தொடக்கத் திரு அவையிலும் நிறைய புதுமைகள் நிகழ்ந்தன. ஆனால் பணத்தையும், அதிகாரத்தையும் இறைஊழியர்கள் நாடியதன் விளைவு இறைப் பராமரிப்பில் பிறப்பு குறைந்து போனது. ஆனால், நமது கடவுளோ நேற்றும், இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). அவரது ஆற்றல் வற்றிப் போகவில்லை. இன்றும் அற்புதங்கள், அடையாளங்கள், வல்ல செயல்கள், செய்ய கடவுள் விரும்புகிறார். அதையே திரு அவையில் எளிய மக்கள் நம்புகிறார்கள்; விரும்புகிறார்கள்; வேண்டுகிறார்கள். அருட்தந்தை மு. வல்தாரிசு அவர்களின் கூற்றுப்படி, "எங்கே இறைவார்த்தையும் இரண்டு மடங்கு நம்பிக்கையும் சந்திக்கின்றனவோ அங்கே உறுதியாகப் புதுமை நடக்கும்". எனவே கடவுளது அற்புதச் செயலை ஏற்றுக்கொள்ள நம்மைப் பயிற்றுவிப்போம் (சஉ 11:5; 1 கொரி 2:9,14).

4. இறைவாக்குகளும் வெளிப்பாடுகளும்

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இறைவாக்கினர்கள் என்பவர்கள் தனியாகவும், குழுவாகவும் செயல்பட்டு கடவுளின் செய்தியை அரசர்களும் மக்களுக்கு இடித்துரைத்தனர். புதிய ஏற்பாட்டில் தூய ஆவியின் வருகையால் நாம் அனைவருமே இறைவாக்குரைக்க உயர்த்தப்பட்டுள்ளோம் (திப 2:17), சிலரோ அப்பணிக்கும் அமர்த்தப்பட்டுள்ளனர் (எபே 4:13), ஆனால், இன்று நம் அவையில் இறைவாக்கினர்களைக் காண்பது அரிதாக உள்ளது. ஒருவர் இறைத் திருவுளத்திற்குப்  பணிந்து  தூய ஆவியில் நிறைந்து வாழும் போதுதான் இறைவனிடமிருந்து செய்திகள் பெற முடியும். கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் எளிய கதாபாத்திரங்கள் இறைவாக்கினராய்த் திகழ்ந்து வெளிப்பாடுகளையும் பெற்றுள்ளனர் என்பது நமக்கு நல்ல படிப்பினை ஆகும்.

எலிசபெத்து மரியா சந்திப்பில் எலிசபெத்து தூய ஆவியால் நிறைந்து உரத்த குரலில் மரியா மீதும் இயேசு மீதும் ஆசீர் மிகு வார்த்தைகளை இறைவாக்காய் எடுத்துரைத்தார் (லூக் 1:40-45)அதற்குப் பதிலாக மரியா பாடிய பாடலில் மீட்பின் வரலாறு சுருக்கமாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்னே அழகு!

செக்கரியாவின் வாய் கட்டவிழ்ந்தபோது யோவான் மற்றும் மெசியா பற்றிய அவரது வெளிப்பாடுகளை ஒரு காட்சிக் கவிதை எனலாம் (லூக் 1:64-79).

குழந்தை இயேசுவைக் கைகளில் ஏந்திய சிமியோனின் இறைவாக்கு எத்துணை ஆழமானதுதொட்டிலில் பிறந்த குழந்தையிடம் தொழுமர இறப்பைக் குறித்துப் பேசியது ஆவியின் சிறப்பான வெளிப்பாடல்லவா! (லூக் 2:28-35). மேலும் மூதரசி அன்னாவின் வார்த்தைகளும் வழிநடத்தும் வார்த்தைகளாகும் (லூக் 2:36-38).

உண்மையான அருள்வாழ்வில் தூய ஆவிக்குப் பணிந்து நாம் நடக்கும்போது இறைவாக்கும் வெளிப்பாடுகளும் நமக்கு நல்ல பயிற்சியினைத் தரும் என்பது உண்மையே!

5. நற்செய்தி அறிவிப்புப்பணி

பெத்லகேமில் மீட்பர் பிறந்துள்ளதுஎல்லாருக்குமானநற்செய்தி என்றார் வானதூதர். அதை இடையர்கள்எங்கும் சென்றுஎடுத்துரைத்தார்கள் (லூக் 2:10-17). பிற இனத்தவருக்கு ஒளியாய் எல்லா மக்களுக்கும் மீட்பராய் இயேசு வந்துள்ளார் என்று சிமியோன் எடுத்துரைத்தார். எருசலேமில் எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அன்னாள் அக்குழந்தையைப் பற்றி பேசிமகிழ்ந்தார்.

கிறிஸ்து பிறப்பில் கடவுள் அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய கொடைகளை அருள்கிறார். அது நமக்கு மட்டுமன்று அனைவருக்குமானது. ஆகவே, கிறிஸ்துவின் பிறப்பினால் பரவசம் அடைவோம். உற்சாகம் கொள்வோம். கடவுளை அவரது பண்புகளைச் சிறப்பாக அவரது பேரிரக்கத்தைக் குழந்தை இயேசுவில் கண்டுணர்வோம். தூய ஆவியின் துணையுடன் இயேசுவை ஆராதிப்போம். நமது தொழுகையில் தன்னையே வழங்கிய மரியா, யோசேப்பு மற்றும் பலர் போன்று நம்மையே காணிக்கையாக்குவோம்.

இம்மீட்பின் நற்செய்தியை நேரிய வழிகளிலும் நற்செயல்களிலும் நம்மைச் சுற்றி உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்.!

Comment