No icon

‘ஒருங்கிணைந்த பகுதி’

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு!

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது இந்தியாவின் உயர்ந்தபட்சச் சட்டமாகும். எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு வரைவு, நெகிழாத்தன்மையும், நெகிழ்ச்சித்தன்மையும் உடையது; கூட்டாட்சியும், ஒருமுகத்தன்மையும் கொண்டது; பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது- என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.

அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள் மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை இது உள்ளடக்கியுள்ளது. இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில், ‘மிக நீண்ட அரசியலமைப்பு’ என்ற சிறப்பையும் இது கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் (Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.

இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் 1947, ஆகஸ்டு 29 அன்று இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று முழுமையடைந்து நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஓர் ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. இந்திய நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றிய இச்சட்ட வரைவு, 1976 இல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா ‘பொதுவுடைமை’, ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘நேர்மை’ இவைகளைத் தன் கொள்கைகளாக அறிவித்தது. ஆகவே, இந்திய அரசியலமைப்பின்படி இந்தியா ஒரு ‘கூட்டாட்சி’ (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘கூட்டாட்சி’ (கூட்டரசு–federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக ‘ஒருங்கிணைந்த பகுதி’ (union) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் (Preamble), ‘இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு’ என்றும், ‘இந்திய ஒன்றியம்’ என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் இச்சொல்லாடல் விளக்கிக் கூறுகிறது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ‘கூட்டாட்சி முறையைக்’ கனடாவில் இருந்தும், ‘அடிப்படை உரிமைகள்’ அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத் திருத்த முறையைத் தென்னாப்பிரிக்காவில் இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது. ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் ‘கடன்களின் பொதி’ என்று அழைக்கின்றனர்.

ஆகஸ்டு 15 விடுதலைப் பெருநாள் நிகழ்வில் உறுதிமொழி ஏற்கும் வண்ணம், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவின் முகப்புரை இங்கே உங்களுக்காக...

Comment