No icon

மனித உருவில் கடவுளின் பேரன்பு

மனித உருவில் கடவுளின் பேரன்பு

பிறப்புக்கான தயாரிப்பு

இதுவரை உலகில் எத்தனையோ மகான்கள், மதத்தலைவர்கள், பேரரசர்கள் தோன்றியுள்ளனர். யாருடைய பிறப்பிற்கும் இவ்வளவு பெரிய முன்தயாரிப்பு நிகழ்ந்ததில்லை. வானமே  வாய்திறந்து  வாழ்த்துச்  சொன்னதில்லை. வானதூதர் தோன்றி பூமிவரை வந்து வழி நடத்தியதில்லை. இறைவாக்கினர்கள் முன்னறிவிக்கவில்லை. மக்கள் விண்ணகத்தைக் கிழித்துக்கொண்டு, ஆண்டவரே விரைந்து வாரும் என்று பல நூற்றாண்டுகள் காத்திருக்கவில்லை (எசா 64:1). பூமியும் வானமும்  ஒன்றாக இணைந்து பாடுபடவில்லை. விண்ணகப் புகழ்கீதம் பூமியில் ஒலிக்கவில்லை. வான் நட்சத்திரம் மண்ணக இருளை பகலாக்கவில்லை. விண்ணொளி பூமியை ஆக்கிரமித்து அதிசயங்களை நிகழ்த்தவில்லை.கடவுளே குழந்தையாகப் பிறக்க விரும்பி ஒரு கன்னியிடம் அனுமதி கோரவில்லை. உலகம் உருவாக்கம் பெற்ற காலமுதல் துவங்கிய தயாரிப்பு இயேசுவின் பிறப்பில் அதன் நிறைவு நிலையை எட்டுகின்றது. கடவுள் மனிதராகின்றார், குழந்தையாகின்றார், ஏழையாகின்றார், நம்மில் ஒருவராகின்றார்.மண்ணவர் மடியில் தவழ்கின்றார். பூமியின் இதயத்தில் இடம்பிடிக்கின்றார். மனிதத்தை அள்ளி அரவணைக்கின்றார். முள்ளை முள்ளால் எடுக்க திட்டமிட்டு மனிதனாகி, மனிதனை மீட்க அவனுடன் கூடாரம் அடிக்கின்றார்.பாவம் தவிர மற்ற அனைத்திலும் அவனைப்போல் வாழ்கின்றார். வானத்திலிருந்து பூமிவரைத் தம்மைத் தாழ்த்தும் கடவுள், தம் கடவுள்தன்மையை உடைத்து நொருக்கிவிட்டு தம் மக்களுக்காகத் தம்மையே செலவிடத் தீர்மானித்துவிட்டார்.இயேசுவின் பிறப்பில் பல இனங்கள் ராகாபு (யோசு 2:1-24, 6:25, எபி 11:31, யாக் 2:25) தாமார் (தொநூ 38:6-26), ரூத்து (ரூத் 3), பெத்செபா (2 சாமு 11-12) பங்கெடுக்கின்றன. உலக மக்களினத்தார் அனைவரையும் ஒருசேர மீட்கத் திட்டமிடும் கடவுள் அனைத்து இனத்தவருக்கும் அதில் பங்கு தருகின்றார். அவரின் ஆசீர்வாதத்திலிருந்து யாரும் பிரிந்திருப்பதில்லை.

வரலாறு படைக்கும் கிறிஸ்துவின் பிறப்பு

கிறிஸ்துவின் பிறப்பு யாராலும் மறுத்துரைக்க முடியாத வரலாற்று உண்மை என்பதை எண்பிக்கும் நோக்குடனே, அன்றைய ஆட்சியாளர்களின் பெயரையும் சேர்த்து லூக்கா (லூக் 3:1-2) குறிப்பிடுகின்றார். அவர்களுக்குக் கிடைக்காத விண்ணகச் செல்வமும் வாழ்வுச் சிறப்பும் அருளின் அர்ச்சிப்பும் நூற்றாண்டுகளைத் தாண்டும் ஆட்சியுரிமையும் இயேசுவுக்குக் கிடைக்கின்றது. கடவுள் தம்மிடம் ஒப்படைத்தது அனைத்தையும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் அவர் பெருமை கொள்கின்றார். அவரது  பிறப்பில்  விண்ணகமும், மண்ணகமும் ஒன்றாகி, கி.மு மற்றும் கி.பி என்று உலக வரலாறு பிரிகின்றது. இவ்வாறு இந்தப் பிறப்பு புதுமையான பல வரலாறுகளைப் பூமியில் படைக்கின்றது. 1. கடவுள் பூமிக்கு வரவே மாட்டார். நாம்தான் அவரைத் தேடிச்செல்ல வேண்டும் என்று உரோமைய, கிரேக்கஇந்திய மதங்களின் பாரம்பரிய தத்துவங்களையே தகர்த்து விடுகின்றார் இயேசு. கிறிஸ்மஸ் விழாவில் கடவுள் மனிதரைத் தேடி வருகின்றார். வானம் பூமியை நாடுகின்றது. நதியைத் தேடி கடல் வருகின்றது. பெரியவர் சிறியவர்களைத் தேடி வருகின்றார். 2. மீட்பு என்பது இவ்வுலகிலிருந்து தப்பியோடி கடவுளிடம் சரணடைவது என்று சில மதங்கள் போதிக்கலாம். ஆனால், நம்மோடு வாழ்ந்து, புவியின் வாழ்வைப் புனிதமாக்கி, அனைவருக்கும் (இவ்வுலகிலேயே) நிலைவாழ்வு தரத்துடிக்கின்றார் இயேசு (யோவா 11:26). இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே இளமைப் பருவத்தில் இறந்த மூவரை உயிர்ப்பித்து புதுவாழ்வு கொடுக்கின்றார் (மாற் 5:41-42, லூக் 7:11-17, யோவா 11:38-44). 3. சில தெய்வங்கள் தமது வெற்றிக்காகவும் தம்மை பெரியவர்கள் என்று காட்டவும் மனித உயிர்களைப் பலியாக்கலாம். ஆனால், இயேசு மற்றவர்களின் பாவங்களைத் தம் தோளில் சுமந்து நமது பதிலாளியாகக் கொலை செய்யபடவிருக்கின்றார். மானிடர் பாவங்களுக்காகத் தண்டனை தீர்ப்புத் தருவது கடவுளின் நோக்கமல்ல. அனைவரையும் ஒருசேர மீட்பதே அவரது நோக்கம் (யோவா 3:17). உண்மையிலே கடவுள் மனித பாவங்களுக்கெல்லாம் தண்டனை தரத் துவங்கினால் உலகம் முழுவதும் சோதோம் கொமோராவாக மாறிவிடும். அவர் மனித பாவ மனநிலையைக் கணக்கில் கொள்வதில்லை. ஆனால், இயேசு ஆவியின் ஆற்றலால் பிறந்து நமது உடலைத் தூய ஆவியின் ஆலயமாக உருவாக்கி, அதற்குள் உறைவிடம் அமைக்கின்றார். 4. நம்மோடு வாழ்ந்து நமக்காக செயல்பட்டு உள்ளார்ந்த உறவுகொள்ளத் துடிக்கின்றார். எந்த சூழலிலும் விட்டுவிலகாத உடனிருப்பு இதுவாகும். தேவையின்போது ஒரு தரைப்படை, கப்பல்படை, விமானப்படைபோல் செயலாற்றும் உடனிருப்பைக்கடவுள் நம்மோடுஎன்ற சொல் அடிக்கோடிடுகின்றது. 5. பெத்லகேமில் தோன்றும் இந்த ஒளி உலகின் ஒளியாகி இருளையும் (சாத்தான்) அதன் ஆற்றல்களையும் நிரந்தரமாக நிர்மூலமாக்கும். மனிதனாகப் பிறந்து மனித வாழ்வைச் சோகமாக்கும் அனைத்தையும் (இறப்பையும் சேர்த்து) தோற்கடிக்கத் தீர்மானிக்கின்றார் இயேசு. பிறந்து இறந்தால்தானே இறப்பைத் தோற்கடிக்க முடியும். இவ்வாறு மனித சோகத்தின் காரணத்தையே வேரறுக்கத் தீர்மானிக்கின்றார் (எசா 40:1-3). 6. மனிதனாகும் கடவுள் முதன்முறையாகக் கண்திறந்து மிக அருகிலிருந்து தம் படைப்பைக்           கண்ணோக்குகின்றார். படைத்தவருக்கும் படைப்புக்கும் இடையில் உறவு நெருக்கம் அதிகமாகின்றது. படைத்தவர் தம் படைப்புடன் இரண்டறக் கலக்கின்றார். இந்த இரவில் மானுடம் மகிமையின் உச்சத்தை அடைகின்றது. பூமியைத் தேடும் இந்த வானம் பூமியின் முகத்தைப் புதுப்பிக்கப்போகின்றது. இனிமேல் பூமியில் பிறக்கும் அனைவரும் மேலிருந்து பிறந்து - கடவுளுக்குள் புதுப்பிறப்பு - எடுப்பர் (யோவா 3:3). 7. அனைவரும் டாக்டர், பொறியியல் வல்லுநர், என்று வாழ்வாங்கு வாழவே பிறக்கின்றனர். ஆனால், இக்குழந்தை தம் மக்களுக்காக இறக்க வேண்டும் என்று பிறக்கின்றது. 8. நூற்றாண்டு காலங்கள் நீடித்த பழைய ஏற்பாட்டு வாக்குறுதிகள் அனைத்தும் இயேசுவில் தம் நிறைவுநிலையை எட்டுகின்றன. பல ஆண்டுகள் நீடித்த கனவு இன்று மெய்ப்படுகின்றது.  9. தம் எளிய மக்களோடு ஐக்கியமாகி அவர்களை மீட்டெடுப்பதே அவரது நோக்கம் என்பதை இந்த எளிய பிறப்பு தெளிவாக்கிவிடுகின்றது. 10. இந்தப் பிறப்பு இருளின் காலத்தை அருளின் காலத்திலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் நம்பிக்கையாளர்களைத் தாக்கி அழிக்கப்போவதில்லை.

கடவுளின் இல்லம், மானிடரோடு

கடவுள் மானிடரோடு இல்லம் அமைத்து நிரந்தரமாக குடியமர்கின்றார். மனிதர் உடல் என்னும் உடை போர்த்திய கடவுள் இயேசு. கண்களுக்குப் புலப்படாத கடவுளை யோவான் கூறுவது போல் (1 யோவா 1:1-2) நமது புறக்கண்களால் பார்க்கின்றோம், அவரது சொற்களை நமது மொழியில் நமது காதுகளால் கேட்கின்றோம், அவரைத் தொட்டு உணர்கின்றோம். அவர் தொடுவது அனைத்தும் முழுமையாகிவிடுகின்றது, முடிவில்லா வாழ்வுக்கு தகுதியுடையதாகின்றது. இன்று விண்ணகமே நமது வாசல்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைந்துவிட்டதாக உணர்ந்து மகிழ்கின்றோம். நமது இதயக் கதவுகளை அவருக்காகத் திறந்து வைக்க அழைக்கின்றது இந்த நிகழ்வு. இயேசுவின் சொற்கள் பலரின் வாழ்க்கைக்கு புதிய வரலாற்றை எழுதும். அவரது செயல்கள் இறையாட்சியை உலகில் நிலைநாட்டும். அவரது பிறப்பில் செயல்களில் கடவுளின் ஆளுமையைக் கண்டு கொள்கின்றோம். இறந்த பின்னும் செயல்பட்டுகொண்டே இருக்கும் உயிர்துடிப்புள்ள கடவுள் அவர். அவர் துவங்கி வைத்த அருளின் காலம் நிகழ்த்தும் அதிசயங்களை இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் அனுபவிக்கின்றது. கடவுள் தமது பேரன்பால் மானிடர்களை நிலையில்லா காலத்திற்கும் தம்மவர்களாக்கத் துடிக்கின்றார். மானிடர் மண்ணுக்குத் திரும்பப் போவதில்லை, விண்ணுக்குச் செல்லவிருக்கின்றனர் என்று வாக்களித்து அவர்களை அங்கு அழைத்துச் செல்லத் துடிக்கின்றார் அவர். அவரது உள்ளுரம் முழுவதும் கடவுளின் கருணை நரம்புகள். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் கொடுத்தவர் தமது கடவுள் தன்மையையும் கொடுத்து விடுகின்றார். குடிலில் நான் காண்பது மனிதனாகிவிட்ட கடவுளின் பேரன்பு. இந்தப் பிறப்பு கடவுளே தற்கையளிப்பு கடவுளின் கொடை. கடவுளின் இரக்கம் முழுமையாகக் குடிலில் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றது. கடவுளின் பேரன்பு (ஆயர்கள், ஞானிகள், வானதூதர்கள் போன்ற) அனைவரையும் (இயற்கை, மாடுகள், குடில் போன்ற) அனைத்தையும் அரவணைத்துக்கொள்கின்றது. இந்தப் பிறப்பு மானுடத்தை ஒரு குலமாக்குகின்றது. பலதரப்பட்டவர்களை ஒரு குழுமமாக உருவாக்கி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குகின்றது. எனவேதான், கிறிஸ்துவின் பிறப்பு இராமகிருஷ்ணர் மடங்களிலும் சத்திய சாய் பாபாவின் புட்டபர்த்தியிலும் கொண்டாடப்படுகின்றது.

இயக்கமாகும் கடவுளின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு ஓர் இயக்கமாக உள்ளது. கடவுள் பூமியை நோக்கி நகர்கின்றார். யோசேப்பும் மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்லகேம் செல்கின்றனர். வானம் பூமியைத் தேடி வருகின்றது. ஆடுகளோடு அலைந்து கொண்டிருக்கும் ஆயர்களை வானதூதர்கள் தோன்றி குடிலுக்கு அனுப்பி வைக்கின்றனர். விண்ணக ஒளி வானத்திலிருந்து பூமியை நோக்கி இறங்கி வருகின்றது. ஆயர்கள் வந்து ஒரு கூட்டத்திற்கு இயேசு பிறப்பின் நற்செய்தியைச் சொல்ல அவர்களும் அதிசயிக்கின்றனர் (லூக் 2:18). வானதூதர் கூட்டம் பூமிக்கு வந்து விண்ணகப் புகழிசைக்கின்றது. கடவுளின் பிறப்பு வார்த்தை மற்றும் பாடல் மூலம் அறிவிக்கப்படுகின்றது. வானதூதர்களின் மொழியை ஆயர்கள் புரிந்து பொருள்கொள்கின்றனர். விண்மீன் ஞானிகளைப் பெத்லகேமிற்கு அனுப்பி வைக்கின்றது. இயேசுவின் பிறப்பு பேரியக்கமாக இருக்கின்றது. இந்த இயக்கத்தில் இணைந்த பலர் தமது இதயத்தைக் கடவுள் வாழும் கோவிலாக்கினர். இதைக் கண்ட அனைவரும் (லூக் 2:17-18) ஆயர்கள் போல் நற்செய்தியாளர்களாக மாறி, செல்லுமிடமெல்லாம் அதை அறிவிக்க வேண்டும். இயேசுவின் பிறப்பில் துவங்கிய இந்த இயக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகில் பயணித்து பலருக்கும் நல்வாழ்வைக் கொடையாகப் பரிசளிக்கின்றது. இயேவின் மூலம் தம் மக்களோடு நிலையில்லாக் காலத்திற்கும் இணைந்திருக்க விரும்பும் கடவுள், திருஅவையோடும் நிலையில்லா காலம் வரை இருக்க வாக்களிக்கின்றார்.பெரிய ஏரோதுவும் கடவுளின் படைப்புதான். காலம் செய்த கோலத்தின் காரணமாக கொலைகாரனாக உருவெடுத்திருக்கலாம். இந்த இயக்கத்தில் இணைய பெரிய ஏரோதுவுக்கும் மூன்று ஞானிகள் மூலம் அழைப்பு விடப்படுகின்றது. ஆனால், அருள்வாழ்வை அவனது கர்வம் மறைத்துக்கொண்டதால் கடவுள் இயக்க நலன்களை இழந்து நின்றார். மமதையில் மழுங்கிபோன அவரது உள்ளம் வெள்ளையாகவில்லை. குடிலில் பிறந்த இயேசுவை உள்ளத்தில் பிறக்க அனுமதிக்காதவர்கள் பெரிய ஏரோதுவின் மனநிலையிலே வாழ்கின்றனர்.

இயேசு–- கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்

கடவுள் மீட்பராக இருக்கின்றார் என்பது இயேசு என்ற சொல்லின் அடிப்படைப் பொருள். கடவுள் இயேசுவில் நமது பாதுகாப்புப் படையாகின்றார். நம்மோடு இருக்கும் கடவுள் (1:23) இறுதிவரை உறுதியோடு இருந்து செயலாற்ற வாக்களிக்கின்றார் (28:20). பழைய ஏற்பாட்டு மெசியா எதிர்பார்ப்புகள் அனைத்தும் இயேசுவில் நிறைவடைகின்றன. எசாயா வாக்களித்தபடி (எசா 11:2) அவர் இதயத்தின் உள்ளாழத்தில் உறைந்து கிடப்பனவற்றை அறிந்து சரியான கண்ணோட்டத்தோடு அனைத்தையும் கணித்து சரியான முடிவுகளை நிறைவேற்றுவார். மனிதர்கள் தங்கள் உணர்வுகளின் அடிப்படையிலும் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்துத் தீர்ப்பிடுவர். ஆனால், மெசியா வெறும் வெளித்தோற்றத்திலிருந்து உண்மைக்குணத்தை வேறுபடுத்துவார் (2 சாமு 14:20). கண்கள் ஏமாற்றலாம். கேள்விச் செல்வம் குறையுடையதாக இருக்கலாம்.

ஆனால், மெசியா அரசன் அவருக்குள் உறையும் இறைசக்தியின் மூலம் மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் உண்மையை அறிந்து நுண்மதியுடன் நீதி வழங்குவார்.இந்தக் குழந்தை மீட்பரிடம் காணப்படும் கடவுள் குணங்களை எசாயா 9:6-7 பட்டியலிடுகின்றார். இந்தக் குழந்தை மீட்பர் அரசர்களுக்கெல்லாம் அரசராகவும் தாவீதின் குலக்கொழுந்தாகவும் அன்பின் அடிப்படையில் மனித இதயங்களில் அமர்ந்து ஆட்சி செய்வார். கடவுளின் சிறப்புக் குணங்கள் அவர் மூலம் பூமியில் நிலைகொள்ளும். அவரின் ஆட்சியில் தீமையின் ஆதிக்கம் இராது. அது உண்மை நீதி நேர்மையின் மறுஉருவமாகவே இருக்கும். அவர் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் சாவு மணியடிப்பார். அடக்குமுறையின் அடையாளமே எங்கும் காணப்படாது. அவர் அமைதியைத் தம் இதயத்தில் தாங்கி அதைப் பலருக்குப் பகிர்ந்தளிப்பார். அவர் நிறைவளம் கொண்ட அரசராக இருப்பார். கடவுளின் புனிதம் அவரில் நீதி நேர்மை வடிவில் பிரசன்னமாயிருக்கும். மக்கள் அவரில் நிறைவாழ்வைக் கண்டு அனுபவிப்பர். மற்றவர்கள் வாழ வேண்டும் என்ற ஆர்வத்தால் பற்றி எரிந்து, மற்றவர் துன்பத்தில் மூழ்கி அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் அவர் பேரார்வம் கொள்வார். நிபந்தனையின்றி தம் மக்களை அன்புசெய்யும் அவர் நிலையான அரசரை உருவாக்கித் தரும் வரை ஓய்வெடுக்கமாட்டார். கடவுளின் ஆற்றலைத் தாங்கிச் செல்லும் அவரது வார்த்தை அவரின் விருப்பத்தை நிலைநாட்டாமல் திரும்பி வராது. அவர் கொண்டுவந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் எந்த மனிதக் காரணியும் எடுத்து விடுவதில்லை.

குடிலில் பிறக்கும் இயேசு

லூக்கா நற்செய்தியில் (லூக் 2:1-21) குடில் என்ற சொல் மூன்றுமுறை இடம்பெறுகின்றது. 1. லூக் 2:7 இல் குடில் இயேசுவின் ஏழ்மையையும் அவர் பலரால் புறக்கணிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றது. 2. லூக் 2:12 இல் இடையர்கள் குழந்தை இயேசுவைக் குடிலில் பார்க்கின்றனர். குழந்தையானது துணிகளில் சுற்றப்பட்டு காணப்படுகின்றது. தம் மக்களுக்காகத் தம்மைக் கையளிக்கும் கடவுளாக அவர் காட்சி தருகின்றார். எசா 1:3 தம்மை அறிந்துகொள்ளும் மக்களாக அவர்கள் இல்லை என்று கடவுள் வருத்தமுற்றார். இப்போது அந்த மக்கள் தம்மை முழுவதும் அறிந்துகொள்ள அனுமதிக்கின்றார் (லூக் 2:16). 3. இயேசு துணிகளில் பொதியப்பட்டு குடிலில் கிடக்கின்றார். பிறந்த குழந்தை சாலமோன் துணிகளில் பொதியப்பட்டார் (சாஞா 7:4). தாவீதின் மகனுக்குக் கொடுக்கப்பட்ட அரச மரியாதை அவருக்கும் கிடைக்கின்றது. இவ்வாறு குடிலில் பிறந்தாலும் குழந்தை அரசனாக தோன்றுகின்றார். குடிலில் அவர் கடவுளின் முகத்தைக் காட்டி நிற்கின்றார்.

அழைக்கும் இறைவன் குரல் கேட்போம்

உலக மாந்தர் அனைவருக்கும் மீட்பு வந்துவிட்டது என்ற வானதூதர்களின் வாழ்த்துக் குரல் குடிலையும் தாண்டி ஒலிக்கட்டும். ஆயிரமாயிரம் முறை இயேசு குடிலில் பிறந்தாலும் நமது உள்ளத்தில் பிறக்காவிட்டால் அவரின் நற்செய்திக்கு அயலார்களாகவே தென்படுவோம். நமக்காகப் பிறந்திருக்கும் கடவுளைக் கைக்கொள்ள கிறிஸ்மஸ் அழைக்கின்றது. நான் உன்னருகில் வந்துவிட்டேன். உன்னோடு கூடாரம் அடிக்க துணிந்துவிட்டேன். எனக்கு இடம் தருவாயா? என்று காத்திருக்கும் இயேசுவுக்கு நம் இதயம் திறந்திருக்கட்டும். கடவுள் இயேசுவின் வழியாக கொட்டிக் குவித்திருக்கும் அன்பை அனுபவித்த நாம் பிறரோடும் கொஞ்சம் பகிர்வோம். பொருள் பகிர்வு மற்றவர்களின் வாழ்வுக்கு மகிழ்ச்சியைக் கூட்டும் என்றால் அதைச் செய்வோம். நாம் கொடுக்கும் நன்கொடைகள் நமது ஆசீர்வாதத்தையும் அள்ளிச் செல்லட்டும். மனிதர்களுக்கு காட்டப்படாத அன்பினால் பயன் இல்லை. ஏழைகளுக்கு காட்டப்படும் இரக்கம் வீண்போகாது. நமது இதயத் துடிப்பை வேகமாக்குவதும் குறைப்பதும் நாம் அதற்கு ஊட்டி வளர்க்கும் உணர்வுகளே. அன்பை அதற்குள் கொட்டி வைத்து, பலருக்கும் அதை பகிர்வோம். இதயத் துடிப்பும் சீராகும், இனிமையான உணர்வுகளும் அதன் சொந்தமாகும். கடவுள் மனிதனாகிவிட்டார். மனிதர்கள் மாமனிதர்கள் ஆக வேண்டும் என்ற நோக்குடன் விழா எடுப்போம்.

Comment