மதத் தலைவர்கள் வேறுபாடுகளைக் கைவிட வேண்டும்!
கர்நாடக மாநிலத்தில் தற்போது மதச் சார்பற்ற அரசியல் கட்சி ஆட்சியில் இருப்பதால், மதத் தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை விட்டு விட்டு ‘நாட்டைக் கட்டியெழுப்பிட உழைத்திடுவோம்’ என்று அம்மாநிலத்தின் உடுப்பி மறைமாவட்ட ஆயர் ஜெரால்ட் ஐசக் லோபோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சர்வதர்ம சௌஹர்த சமிதி எனும் பல்சமயக் கூட்டத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் ஜெரால்ட், “புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மதத்தினரும் இணைய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் ஒரே இந்தியத் தாயின் குழந்தைகளாக வாழ முடியும். இந்தியா அமைதியின் தோட்டம் என்பதை நமது செயல்கள் உணர்த்த வேண்டும்” என்று கூறினார். கர்நாடகக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் அருள்பணியாளர் பாஸ்டின் லூக்காஸ், “கடந்த முறை கர்நாடகாவை ஆட்சி செய்த மதச்சார்பு கட்சி மக்களைச் சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிக்க விரும்பியது. இதனால் உடுப்பியில் பல மதவெறி வன்முறைகள் நடந்தன. இம்முறை மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் ஒன்று கூடுவோம்” என்று கூறினார்.
Comment