No icon

கோவை ஆயரின் ஆசியுரை

செபமாலை அன்னை பக்தி குடும்பங்களை ஒன்றிணைக்கும்!

அன்புள்ள அருள்தந்தையர்களே, அருள்சகோதர, சகோதரிகளே! திருப்பயணம் மேற்கொள்ளும் இறைமக்களே! மற்றும் ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே! இறை இயேசுவின் நாமத்தில் உங்களுக்குக் கோவை, கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் பெயரால் வாழ்த்துகளையும், செபங்களையும் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

அன்னைக்கு ஆயிரம் பெயர்கள் இருந்தாலும், ‘செபமாலை அன்னை’ என்னும் பெயரும், அதன் பொருள் பொதிந்த ஆன்மிகச் செயலான செபமாலை செபிப்பதும், நாம் அன்றாட வாழ்வில் அவரை நினைவுகூர்வதும் சிறப்பு வழிமுறைகளாகும். இந்தப் பக்தி முயற்சி நமது குடும்பங்களை ஒன்றிணைத்து, திரு அவையையும் சமூகத்தையும் புதுப்பிக்கும் ஓர் உன்னத செயல். அக்டோபர் மாதம் என்றாலே செபமாலை செபிக்கும் மாதம் ஆகும். இந்தத் தருணத்தில் கோவை மறைமாவட்டத்தில் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவில் ஆண்டுப் பெருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு அன்று வெகு சிறப்பாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. இதைக் காணும் நீங்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறை ஆசிரைப் பெற்றுச் செல்ல அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன். இறையாசிர்!

 

Comment