No icon

இருள் விலகியது

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா ஆசீரும்! வாழ்த்துகளும்!

இந்தப் பூமிப் பந்தும், ஒட்டுமொத்த உலகமும் ஒளியில்லாமல், இருளில் ஆழ்ந்து கிடக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில், பாம்பின் உருவில் தோன்றிய அலகையின் திட்டமாக இருந்தது. முதல் மனிதனாகிய ஆதாமைக் கவர்ச்சிகர வார்த்தைகளால் அது மயக்கிப் பாவம் செய்ய வைத்தது. மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையால் பாவம் செய்ததால், ‘இந்த உலகம் இனிமேல் தன்னுடைய பிடிக்குள் - இருளின் பிடிக்குள் இருக்கும்என்று அலகை நினைத்திருக்கும்! கடவுளோ அதனிடம், “உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்...” (தொநூ 3:15) என்று கூறி, அலகையின் திட்டத்தை முறியடிக்கின்றார்.

அலகையின் திட்டம் முறியடிக்கப்பட்டு, கடவுளின் திட்டம் வெற்றியடைந்ததற்கான மிகப்பெரிய சான்றுதான் இயேசுவின் உயிர்ப்பு! இதனைஉலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள்; நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவா 16:33) என்ற இயேசுவின் வார்த்தைகளே நமக்கு எண்பிக்கின்றன. ஆம், இயேசுவின் உயிர்ப்பினால், இவ்வுலகைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த அலகை என்ற இருள் விலகியது. எங்கும் ஒளி படர்ந்தது.

இயேசுவின் உயிர்ப்பு பலவிதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. அது எந்தெந்த விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது? இயேசுவின் உயிர்ப்பு நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்ன? என்பன பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்தவத்தின் அடித்தளம்

எந்தவொரு கட்டடத்திற்கும் அடித்தளம் மிகவும் இன்றியமையாத ஒன்று. அடித்தளமின்றிக் கட்டப்படும் எந்தவொரு கட்டடமும் நிலைத்து நிற்பதில்லை. கிறிஸ்தவம் அல்லது திரு அவை என்ற எழில்மிகு மாளிகை ஈராயிரம் ஆண்டுகளாய் இவ்வளவு உறுதியாய் இருப்பதற்குக் காரணம், இது நல்லதோர் அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கின்றது என்பதாலேயே ஆகும்இந்த நல்லதோர் அடித்தளம் வேறொன்றுமில்லை; இயேசுவின் உயிர்ப்பே ஆகும்.   இயேசுவின் உயிர்ப்பு என்ற அடித்தளத்தில்தான் கிறிஸ்தவம், திரு அவை உறுதியாய்க் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்துப் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறும்போது, “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி 15:14) என்பார்.

இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் தம்முடைய உயிர்ப்பைப் பற்றித் தம் சீடர்களிடம் பலமுறை எடுத்துரைத்த போதும் (மத் 12:39-40, 16:21; யோவா 2:19), அதை அவர்கள் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருந்தார்கள். எப்போது அவர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்கூடாகக் கண்டார்களோ, அப்போதிலிருந்தே அவர்கள் உயிர்த்த ஆண்டவரைப் பற்றித் துணிவுடன் அறிவித்தார்கள். “என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20) என்று பேதுருவும், யோவானும் யூதத் தலைமைச் சங்கத்திலிருந்தவர்களிடம் சொல்லும் வார்த்தைகள், இயேசுவின் உயிர்ப்பு யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த அவர்களிடத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆகையால், இயேசுவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. இதனை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் நடுவில், அதனை அறிவிப்பதற்குச் சீடர்கள் தங்கள் உயிரையும் இழக்கத் தயாராக இருந்தார்கள் என்பது நமது மனத்தில் இருத்த வேண்டிய ஒன்று.

தேடுவோர் கண்டடைவர்

பெற்ற நன்மைகளை உடனே மறந்துவிடும் மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. நற்செய்தியில் கூட, இயேசுவிடமிருந்து நலம் பெற்ற பத்துத் தொழுநோயாளர்களில், சமாரியரைத் தவிர்த்து, மற்ற ஒன்பது பேர் அவரிடம் திரும்பி வரவே இல்லை; ஆனால், இயேசு தன்னிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டியதற்கு நன்றியாக (லூக் 8:2) அவரை இறுதிவரைப் பின்தொடர்கின்றார் மகதலா மரியா. மட்டுமல்லாமல், இவர் வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே கல்லறைக்குச் செல்கிறார். அங்கே கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு, செய்தியைச் சீடர்களிடம் சொல்கிறார். அதோடு நின்று விடாமல், இவர் கல்லறைக்கு வெளியே நின்று, ‘ஆண்டவராகிய இயேசுவின் உடலை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்என்று சொல்லி அழுகின்றார். அப்போதுதான் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவருக்கு முதன்முறையாகத் தோன்றுகின்றார்.

சீடர்கள் யாவரும் இயேசுவை விட்டு ஓடிப் போனபோதும், எங்கே தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்று யூதர்களுக்குத் தெரிந்தால், அவர்களிடமிருந்து தங்களுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சி, தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த போதும், மகதலா மரியா யாருக்கும் அஞ்சாமல் மிகவும் துணிவுடன் இயேசுவை இறுதிவரை பின் தொடர்கின்றார்; வாரத்தின் முதல் நாளில் அவரைத் தேடிச் செல்கின்றார். இவ்வாறு அவர் இயேசுவைப் பின்தொடர்ந்தும், அவரைத் தேடியும் இருந்ததால், உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில் காணும் பேறு பெறுகின்றார். மத்தேயு நற்செய்தியில் இயேசு, “தேடுவோர் கண்டடைகின்றனர்” (மத் 7:8) என்று சொல்வார் அல்லவா! இந்த வார்த்தைகளுக்கு மிகப்பெரிய சான்றாக இருப்பவர் மகதலா மரியா என்றால் அது மிகையில்லை

நல்லதையே அருளும் (உயிர்த்த) ஆண்டவர்

நல்லதையே ஆண்டவர் அருள்வார்” (திபா 85: 12) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுவார். உயிர்த்த ஆண்டவரும் நல்லதையே அருளினார். தம்மைத் தேடிய மகதலா மரியாவிற்கு உயிர்த்த ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார் என்று முன்பே பார்த்தோம். உயிர்த்த ஆண்டவர் தம்மைத் தேடியவருக்கு மட்டுமல்ல, தேடாதவருக்கும் அல்லது தம்மை விட்டுவிட்டு ஓடிப்போன தம் சீடர்களுக்கும் அவர் தம்மை வெளிப்படுத்தினார். இதன்மூலம், உயிர்த்த ஆண்டவர் அவர்களுடைய குற்றங்களை மன்னித்தது மட்டுமல்லாமல், அவர்களில் நம்பிக்கை பெருகச் செய்து, துணிவுடன்  தமக்குச் சான்று பகரச் செய்கின்றார்.

இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் தம் சீடர்களிடம் மீண்டும் மீண்டுமாகத்  தம் பாடுகளை எடுத்துரைத்தபோது, அது அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆனால், இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, அவர் எதற்காகப் பாடுபட வேண்டும் என்பதன் அர்த்தம் அவர்களுக்குப் புரிந்தது. அது மட்டுமல்லாமல், இயேசுவின் உயிர்ப்பு அவருடைய சீடர்களுக்கு அவரது பணியை இன்னும் அதிகமாய்ச் செய்ய வேண்டும் என்ற உறுதியை அளித்தது. இதைப் பற்றிப் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறும்போது, “ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாது என்பதை அறிந்து, ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்” (1கொரி 15: 58) என்கிறார்.

தம்மைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்ட இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றுவிட் டால், அவரது வாழ்க்கை அதோடு முடிந்துவிடும்என்று யூதர்களும், ஆட்சியாளர்களும் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்ட இயேசுவைக் கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலால் உயிர்த்தெழச் செய்தார் (எபே 1:20). இத்தகைய வலிமைமிக்க கடவுள், தம் ஒரே மகனின் அன்புப் பணியைச் செய்யும், ஒவ்வொருவருக்கும் தம் வலிமையையும், ஆற்றலையும் அளித்திடுவார் என்பது உறுதி.

இயேசுவின் இறப்போடு எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் சீடர்கள் நினைத்தார்கள். அதன்பொருட்டே அவர்கள் முன்பு தாங்கள் செய்து வந்த வேலையைப் பார்க்கக் கிளம்பிப் போனார்கள். ஆனால், உயிர்த்த ஆண்டவர் இயேசு அவர்களுக்குத் தோன்றி, மீண்டுமாகத் தம்முடைய பணிக்கு அழைத்து, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். இதனால் யாரெல்லாம் கடவுளுடைய பணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் கடவுளுடைய வல்லமையால், அவரது பணியைச் செய்ய முடியும் என்பது திண்ணம். இதைப்பற்றிப் பேதுரு தன்னுடைய முதல் திரு முகத்தில் கூறும்போது, ‘தம்முடைய மாட்சியாலும், ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவரை அறிந்து கொள்வதன் மூலம், இறைப் பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்கான எல்லாவற்றையும் அவர்தம் இறைவல்லமையால் நமக்கு அருளியுள்ளார்” (1பேது 1:3) என்கிறார்.

உயிர்த்த ஆண்டவர் இயேசு சீடர்களிடத்தில் கொண்டு வந்த மிகப்பெரிய மாற்றம், அவர்கள் நட்புறவிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருக்கச் செய்ததுதான். கிறித்தவம் வேகமாக வளர்ந்தபோது பல இனத்தாரும்  அதில் ஒன்றிணைந்தார்கள். அவ்வாறு ஒன்றிணைந்த யாவரும் தங்களிடமிருந்த வேறுபாடுகளைக் களைந்து, நட்புறவில் வாழ்ந்ததற்கு (திப 2:42) மிக முக்கியமான காரணம், அவர்கள் உயிர்த்த ஆண்டவரிடமிருந்து பெற்ற அனுபவம்தான். என்றைக்கு நாம் உயிர்த்த ஆண்டவரை ஆழமாய் உள்வாங்குகின்றோமோ, அன்றைக்கு நாம் ஒரு மனத்தவராய் வாழ்வோம் என்பது நிச்சயம்.

நிறைவாக, உயிர்த்தெழுதலும், வாழ்வுமான இயேசு கிறிஸ்துவிடத்தில் நம்பிக்கை கொள்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர் நிலைவாழ்வைத் தருவதாக வாக்களிக்கின்றார் (யோவா 11:25). இங்கே இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளுதல் என்னவென்று சற்றே தெரிந்துகொள்ள வேண்டும். இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளுதல் என்னவென்றால், தொடக்கத்தில் நாம் பார்த்ததுபோல, இருளின் சக்திகளை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு, ஒளியாம் இயேசுவைப் பின்தொடர்தல். அவ்வாறு நாம் செய்தால், நமக்கு நிலைவாழ்வு பரிசாகக் கிடைக்கும்.

ஆகையால், நாம் நம்மிடமிருந்து இருளின் சக்திகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, வாழ்வுக்குக் காரணராம் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோம்! ஒளியின் மக்களாய் வாழ்வோம்!

+ மேதகு முனைவர் அந்தோனிசாமி

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர்

Comment