No icon

ஞாயிறு – 11.06.2023

ஆண்டவர் இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா இச 8:2-3,14-16, 1கொரி 10:16-17, யோவா 6:51-58

திருப்பலி முன்னுரை

இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றோம். நாம் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு தனது கடைசி சொட்டு இரத்தத்தையும், தண்ணீரையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக தந்து சென்றார். இறுதி இரவு உணவின் போது, தனது திருத்தூதர்களின் பாதங்களை கழுவி இதோ எனது உடல், இதோ எனது இரத்தம் இதை என் நினைவாக செய்யுங்கள் என்று, தனது தூய்மைமிகுந்த திருவுடலையும், திருஇரத்தத்தையும் பரிசாக தந்து சென்றார். பழைய ஏற்பாட்டை பொருத்தவரை, இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணக்கூடாது. ஏனெனில், இரத்தத்தில் உயிர் இருக்கிறது. ஆகவே, ஒருவர் இரத்தத்தோடு உண்ணும் போது, அந்த உயிரினத்தின் உயிரையே குடிக்கிறார். இது கொலை குற்றமாகும். எனவேதான், இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதீர்கள் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டிலே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த சிந்தனையை முற்றிலும் மாற்றுகிறார். என் உடலை உண்டு, என் இரத்தத்தை குடித்தாலொழிய, நீங்கள் நிலைவாழ்வை பெறமுடியாது, விண்ணரசுக்குள்புக முடியாது என்ற கட்டளையைத் தருகிறார். ஏனெனில், இரத்தத்தில் உயிர் இருக்கிறது. பாவத்தின் கூலியாக மரணத்தைப் பெற்றிருக்கிற நமக்கு, இந்த இரத்தம் மட்டுமே உயிர் அளித்து, தூய்மைப்படுத்தி, நிலைவாழ்வைத் தர முடியும் என்ற கருத்தை உணர்ந்து கொள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர் இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தை உட்கொள்ளும் நாம், அவரின் குணநலன்களுக்கு ஏற்றவாறு வாழ்கிறோமா என்று சிந்தித்தவர்களாய் இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

நம் ஆண்டவர் எகிப்திலிருந்து விடுவித்து, பாலை நிலத்தில் நம்மை எவ்வாறு பராமரித்து அழைத்து வந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பருக நீரும், உண்ண மன்னாவும் தந்த அந்த இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வோம் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு அளித்த கிண்ணத்திலிருந்து பருகுகிறபோது, நாம் அவருடைய இரத்தத்தில் பங்குகொள்கிறோம். அவர் நினைவாக அப்பத்தை பிட்கும் போது, அவரது உடலில் பங்கு கொள்கிறோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புதந்தையே! உமது திருமகனின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை கொண்டாடும் உமது திருஅவையை ஆசீர்வதியும். உமது திருமகனின் மற்றொரு உடலாகத் திகழும் உமது திரு அவை அனைவருக்காகவும் பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணக தந்தையே! அன்று உம் மக்களை ஆள அரசர்களை தந்தீர், இன்று தலைவர்களை அளித்துள்ளீர். இவர்கள் அனைவரும் உமது மக்களை அமைதியில், அன்பில் வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் பரம்பொருளே! நாங்கள் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு, எம் பங்கில் ஒற்றுமையுடனும், சகோதர உணர்வுடனும் நாங்கள் பணியாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையை அருள்பவரே! உமது திருமகனின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை கொண்டாடும் இந்நாளில், அவரது திருவுடலில், திருஇரத்தத்தில் நம்பிக்கை இல்லாத மக்களை நீர் ஆசீர்வதித்து, ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள்ள அவர்களுக்கு நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! அன்று நீர் பாலைவனத்தில் மன்னாவை பொழிந்ததுபோல, உண்ண உணவின்றி பசியால், பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இன்றும் நீர் உணவளித்து, வாழ்வளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment