No icon

பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு (11-08-2024)

1அரசர்கள் 19:4-8; எபேசியர் 4:30-5,2; யோவான் 6:41-51

திருப்பலி முன்னுரை

உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் உணவைக் குறிக்கிறது. நற்கருணை என்பது கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் நம்பிக்கையாளர்கள் திருவழிபாட்டில் பெற்றுக்கொள்ளும் ஆன்மிக உணவைக் குறிக்கிறது. இது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது மற்றும் சவால்களையும், துன்பங்களையும் தாங்குவதற்குத் தேவையான வல்லமையை அவர்களுக்கு வழங்குகிறது. மேலும், நற்கருணை நம் வாழ்வின் நம்பிக்கை உணவு. ஏனெனில், இது நம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்க்கையை வளர்க்கிறது; ஒற்றுமையான சமூகத்தை உருவாக்குகிறது; அழியாத வாழ்வையும், மன்னிப்பையும் உறுதியளிக்கிறது; நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவுடன் இணைகிறார்கள் என்பதை நினைவூட்டுகிறது. எனவே, நாம் அன்றாடம் உண்ணும் நற்கருணை, பிறரை ஒதுக்கிவைக்காமல், வெறுக்காமல் அன்பு செய்ய நம்பிக்கையைத் தூண்டும் ஆன்மிக உணவாக அமைய வரம் வேண்டி இந்தத் திருவழிபாட்டில் நம்பிக்கையோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எலியா, ஈசபேல் அரசிக்கு எதிராக நீதியின் சார்பாகப் போரிடுகிறார். அவரிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள பாலைநிலத்தில் பயணம் செய்கிறார். சூரைச் செடியின் அடியில் அமர்ந்து, தான் சாகவேண்டும் என விரும்புகிறார். ஆனால், ஆண்டவர் உணவால் அவரைத் திடப்படுத்தி, எதிர்த்துப் போராடத் துணிச்சலைக் கொடுக்கும் நிகழ்வைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பவர் தூய ஆவியார். கிறிஸ்தவர்கள் இந்தத் தூய ஆவியாருக்கு உகந்த வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறார்கள். அன்புதான் தூய ஆவியாரின் இயல்பு. அன்பால் இந்த உலகத்தை ஆள முடியும் என்ற சிந்தனையை ஏற்று இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. பண்பை வளர்க்கும் பரமனே எம் இறைவா! சுயநல உலகத்தில் வாழும் நாங்கள், எங்கள் விருப்பத்தைவிட, பிறரின் தேவையை அறிந்து வாழ தேவையான வரத்தைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமே உருவான இறைவா! எம்மை வழிநடத்தும் அனைத்து அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுய நலத்தை விட்டு விட்டு மக்களின் நலனுக்காக உழைக்க முன்வர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. தூய்மையான உதடுகளைத் தந்த ஆண்டவரே! எம் நாவைத் தூய்மைப்படுத்தி, அடுத்தவர்களின் நன்மைத்தனத்தை அறிவிக்கக் கூடிய ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்

4. சிறைப்பட்டோர் விடுதலை பெற வேண்டும் என்று கூறிய ஆண்டவரே, தவறாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் மனம் வருந்தி, திருந்தி வாழ வேண்டும் என்று சிறையிலிருந்து செபிக்கும் இல்லறவாசிகளைக் கண்ணோக்கி விடுதலையைத் தரவேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment