No icon

திருப்பீடத் துறை நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டம்

சமூகத்தொடர்புப் பணிகள் உண்மையுள்ளதாக இருக்கவேண்டும்

சமூகத்தொடர்புப் பணிகளை ஆற்றுவோர் எப்போதும் உண்மையைத் தேடவேண்டும், வெறுப்பைத்தூண்டும் பேச்சுகளுக்கு எதிராய்ச் செயல்படவேண்டும், குரலற்றவர்களுக்கு குரல்களாகச் செயல்படவேண்டும் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்க்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சமூகத்தொடர்பு திருப்பீடத் துறை நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும், அத்துறையில் பணியாற்றுவோர் என ஏறத்தாழ 200 பேரை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், நவம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்புப் பணியாளர்களின் கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இச்சமூகத்தொடர்பாளர்களுக்கென்று தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல் அந்நேரத்தில் தன் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, புறக்கணிக்கப்பட்டோருக்காக குரல்கொடுத்து, அவர்களுக்கு அருகிலிருக்குமாறு ஊக்கப்படுத்தினார். பொதுவாக நாம் புறக்கணிக்கின்ற காரியங்கள் மீது கவனம் செலுத்தப்பட பணியாற்றுமாறும், சமூகத்தொடர்பாளர்களின் பணியில் கடவுளின் குரல் எதிரொலிக்கப்படவேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, சமூகத்தொடர்பின் மூன்று மூலைக்கற்கள் குறித்து எடுத்துரைத்தார்

சமூகத்தொடர்பின் மூன்று மூலைக்கற்கள்

மக்களிலிருந்து தனிமை உணர்வை அகற்றுதல், குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்தல், உண்மையை வழங்குவதற்கு ஒருவர் தன்னையே உருவாக்குதல் ஆகியவை, சமூகத்தொடர்பின் மூன்று மூலைக்கற்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை, பல ஆண்களும் பெண்களும் தனிமை உணர்வை எதிர்கொள்ளும்வேளை, அவர்களிடமிருந்து இதனைக் குறைக்காவிடில், சமூகத்தொடர்பு, வெறும் பொழுதுபோக்காகவே இருக்கும் என்று கூறியுள்ளார்

உற்றுக்கேட்டல், சந்திப்பு, மக்களின் கதைகளைக் கூறுதல் ஆகியவற்றிலிருந்து மலர்வதே, உண்மையான சமூகத்தொடர்பு என்றுரைத்த திருத்தந்தை, எதார்த்த வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் முறை குறித்து நாம் அறியாதிருந்தால், எவருமே கவனம் செலுத்தாத வழிகளையே சுட்டிக்காட்டுவோம் என்றும், சமூகத்தொடர்பு, செவிமடுத்தலுக்கு ஆதரவாகச் செயல்படும் திருஅவைக்கும் பணியாற்றுவதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றம் மற்றும் சமூகத்தொடர்பு: முன்னேற்றப்படவேண்டிய பாதை என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளாவிடில், நாம் வெறும் திருஅவை நிறுவனமாகவே இருப்போம் என்றும், நம் ஆண்டவர் இயேசு கூறிய, நீங்கள் உலகின் உப்பு, உலகின் ஒளி என்பதற்கேற்ப வாழும் திறனை இழந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

Comment