No icon

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மலர்த் தோட்டம்

ஹாலந்து நாட்டின் புகழ்பெற்ற மலர்
அலங்கார கலைஞர் பால் டெக்கர்ஸ் முப்பத்தி மூன்றாவது முறையாக இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு ஹாலந்து நாட்டு மலர்களை வழங்கி, புனித பேதுரு வளாகத்தில் பூந்தோட்டத் தால் அலங்கரித்தார். அவரோடு முப்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வண்ண வண்ண மலர்செடி
களைக் கொண்டு அமைத்த பூந்தோட்டம் பார்ப்பவர் அனைவரையும் பரவசத்தில் அமிழ்த்
தியது.   வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவும், வளாகமும், 55 ஆயிரம் பலவண்ண மலர்கள் மற்றும் செடிகளால், அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன.  திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றும் பீடத்திற்கு முன்பாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில், 25 ஆயிரம் மணிவடிவ மலர்ச்செடிகள், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில், ஏழாயிரம் சிவந்திப்பூ போன்ற வடிவமுடைய மலர்கள், மூவாயிரத்திற்கு அதிகமான ரோஜாக்கள், செந்நீல நிறம்கொண்ட ஆறாயிரம் மணிவடிவ மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தந்தையருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், ஹாலந்து நாடு, இந்த மலர்த் தோட்டத்தை, ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது.
700 ஆம் ஆண்டின் இறுதியில் தென் ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு
வரப்பட்ட, “சொர்க்கத்தின் பறவை” என அழைக்கப் படும், ஆரஞ்சு மற்றும் நீல நிற மலர்களும், இலைகளும் கொண்ட செடிகள் முதன்முறையாக, வைக்கப்பட்டிருந்தன. பசிலிக்காவுக்கு முன்புறம்,
திருத்தந்தை அமரும் பெரிய நாற்காலிக்கு இருபுற
மும், அலரி போன்ற சிறுகொம்புகளையுடைய செடிகள் மற்றும் மலர்கள் உட்பட, பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மலர்த்தொட்டிகளும், செடிகளும் வைக்கப்பட்டிருந்தன.
புனித பேதுரு பசிலிக்காவின் பலி
பீடத்திற்கு முன்புறத்தை அலங்கரித்திருந்த,
ஏறக்குறைய முன்னூறு ஓர்க்கிதே மலர்கள்,
சுலோவேனிய நாட்டிலிருந்து கொண்டுவரப் பட்டவை. இம்மலர்கள், ஒரு காலத்தில், ஜப்பானிலிருந்து சுலோவேனியாவிற்கு எடுத்துவரப்பட்டு வளர்க்கப்பட்டவை. கடந்த 15 ஆண்டுகளாக, சுலோவேனியாவிலிருந்து மலர் அலங்காரம் செய்பவர்கள் வந்து, வத்திக்கான் தோட்டப் பணியாளர்களுடன் இணைந்து, பசிலிக்காவில் மலர் அலங்காரத்தை அமைக்கின்றனர்.

Comment