No icon

திருஅவைக்கு விரைவில் இரு புதிய புனிதர்கள்

திருஅவைக்கு இரு புதிய புனிதர்கள் மற்றும், ஒரு புதிய அருளாளரை அறிவிப்பது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் மே 13 ஆம் தேதி அனுமதியளித்துள்ளார். புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளையாற்றும் பேராயத் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பெச்சு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, இரண்டு அருளாளர்கள் மற்றும், ஒரு வணக்கத்துக்குரியவரின் பரிந்துரைகளால் இடம்பெற்றுள்ள புதுமைகள், இன்னும், ஐந்து இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணியம் நிறைந்த வாழ்வு குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தார். உரோமையில் பிறந்த அருளாளர் ஜோஸ்பினா வானினி  (7, ஜூலை,1859-23, பிப்.1911) புனித கமில்லஸ் அருள்சகோதரிகள் சபையை நிறுவியவர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த அருளாளர்  துல்சே லோபஸ் போன்டஸ்  (26 மே,1914-22 மே,1992), இறையன்னையின் அமல மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்தவர். இத்தாலியரான வணக்கத்துக்குரிய அமலமரியின் லூசியா அவர்கள் (26,மே 1909-4,ஜூலை 1954) பிறரன்பு சிறிய சகோதரிகள் சபையைச் சார்ந்தவர். இம்மூவரின் பரிந்துரைகளால் இடம்பெற்றுள்ள புதுமைகள் மற்றும் ஏனைய ஆவணங்களை, திருத்தந்தை ஏற்றுக்கொண்டார். மேலும், இத்தாலியர்களான இறைஊழியர்கள் ஆயர் ஜான் பாட்டிஸ்டா பினார்டி, அருள்பணி கார்லோ சலேரியோ , இஸ்பானியரான மரியா கழகத்தின் அருள்பணி டோமினிகோ லாசாரோ காஸ்ட்ரோ , பிரேசில் நாட்டவரான கப்புச்சின் துறவி சல்வதோரே டா காஸ்கா, இத்தாலியில் பிறந்து அர்ஜென்டினாவில் இறைபதம் சேர்ந்த மரியா யுப்ரசியா லாகோனிஸ் ஆகிய ஐவரின் வீரத்துவப் புண்ணியம் நிறைந்த வாழ்வு குறித்த விவரங்களையும் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்.

Comment