No icon

வத்திக்கான் செய்திகள்

பெர்கமோ மருத்துவமனைக்கு திருத்தந்தை பொருளுதவி

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமியால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருக்கும் பெர்கமோ பகுதியின் மருத்துவமனை ஒன்றிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அறுபதாயிரம் யூரோக்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

திருத்தந்தை வழங்கியுள்ள இந்த உதவி குறித்து செய்தி வெளியிட்டுள்ள பெர்கமோ மறைமாவட்டம், திருத்தந்தையின் தந்தைக்குரிய பாசமும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவரின் நெருக்கமும் எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என அறிவித்துள்ளது.

பெர்கமோ பகுதியின் திருத்தந்தை புனித 23ம் யோவான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் உதவி, அப்பகுதியில் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவையை மனதில்கொண்டு, ஒரு புதிய மருத்துவக்கட்டடம் கட்ட பயன்படும் எனவும் அந்த மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமி நோயால் உயிரிழந்தவர்களுள் 56 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள், வட பகுதியின் லொம்பார்தியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், லொம்பார்தியா மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் பெர்கமோ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment